நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று (அக்டோபர் 9) உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் பணி நியமனம்  செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 500 நாட்களுக்கு பிறகு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுமதி கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அதன் முடிவில் தனி நீதிபதி உத்தரவிட்டு 500 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தாததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் பல்வேறு உத்தரவுகள் இதே போன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், 50 சதவீத வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் அரசியல் தலையீடு உள்ள சில வழக்குகள் மட்டுமே அரசு அவசரம் காட்டுவதாகவும், இது அரசின் துறை சார்ந்த அதிகாரிகளின் மெத்தன போக்கையே காட்டுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்

இதுபோன்ற பள்ளிக்கல்வித்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளில் 50 சதவீத வழக்குகளில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், இது அரசுத்துறையைச் சார்ந்த அதிகாரிகளின் மெத்தனப் போக்கைக் காட்டுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் `சில முக்கிய வழக்குகளில் அரசின் மெத்தனப் போக்கு காணப்படுகிறது. அரசியல் தலையீடு உள்ள சில வழக்குகள் மட்டும் துரிதப்படுத்தப் படுகின்றன' என்பதை நீதிமதிகள் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.

இந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறையின் செயலர் மற்றும் இயக்குனர்களை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எதிர்மனுதாரராக சேர்த்துக்கொள்கிறது. தமிழகத்தில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு  444 கோடி ரூபாய் ஊதியமாக அரசு வழங்கி வருகின்றது. ஆனால், அவர்களின் பணி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியே.

நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு அபராதம் விதிக்கப்பட வேண்டும். அதனால்தான் இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை அலுவலருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகின்றது. இந்த அபராதத் தொகை அவரது ஊதியத்தில் அரசு பிடிமானம் செய்ய வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தாமலும், மேல்முறையீடு செய்வதிலும் அரசு அதிகாரிகள் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றனர்.

கல்வித்துறை அதிகாரிகளுக்கு முறையான சட்ட ஆலோசனை கிடைக்கப் பெறாததால் இதுபோன்று நடைபெறுகின்றது. எனவே, அவர்களுக்கு முறையான சட்ட ஆலோசகர்களை தமிழக அரசு ஏன் நியமனம் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலர் மற்றும் இயக்குனர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.