எப்போதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் நடிகர் STR. சென்ற லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் எனும் குறும்படத்தில் நடித்து ஓர் ட்ரெண்ட் செட் செய்தார். STR ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். 

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. 

சமீபத்தில் மாநாடு படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் துவங்கவுள்ளதாம். இந்த செய்தியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் STR ரசிகர்கள். 

மாநாடு படத்துக்கு முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கலில் தொடங்கிவிட்டாலும், நாளை (அக்டோபர் 10) முதல் சிம்புவின் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. தற்போது 14 கிலோவுக்கு மேல் குறைத்து மிகவும் உடல் இழைத்துவிட்டார் சிம்பு. அவருடைய புதிய தோற்றம் இன்னும் வெளியாகவில்லை. கேரளாவில் முழுமையாக உடல் ரீதியான சிகிச்சையை முடித்துவிட்டு, பல்வேறு கோயில்களில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

நேற்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் பலரும் சிம்பு நடந்துவருவதை வீடியோ, புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது யாருக்குமே தன்னுடைய லுக் வெளியே தெரியக் கூடாது என்று துண்டை வைத்து முழுமையாக முகத்தை மூடிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார் சிம்பு. அப்போதும் பலரும் புகைப்படம் எடுக்கவே, முழுமையாக முகத்தை மூடிக் கொண்டுள்ளார். ஆனாலும், அந்தப் புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கிறாராம். ஒளிப்பதிவாளராக திரு பணிபுரிந்து வருகிறார். சுசீந்திரன் படத்துக்காக முழுக்க தாடி வளர்த்து தயாராகியுள்ளார் சிம்பு. அதனால் தனது லுக் எந்தவொரு காரணத்தைக் கொண்டு வெளியாகி விடக்கூடாது என முடிவு செய்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் கூட செல்போன்களுக்கு அனுமதியில்லையாம். 

STR கைவசம் மஹா திரைப்படம் உள்ளது. இந்த படத்தில் நடிகர் STR கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். எட்ஸெட்ரா எண்டர்டெயிமென்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிகை ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் மஹா. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.