மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துமனையின் தலைவராக தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ள வி.எம்.கடோச் நேற்று நியமனம் செய்யப்பட்டிருந்தார். இவருடன் 14 பேர் கொண்ட உறுப்பினர்களையும் நியமித்து மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ``மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் குழுவில், சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக, நடுவண் அரசு அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது" என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும்போது, “மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்கி விட்டு - தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக்குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

``மதுரை “எய்ம்ஸ்” மருத்துவமனை நிர்வாகக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் நியமிக்காத மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்படவிருக்கிறது. பா.ஜ.க. எனும் அரசியல் கட்சியின் சொந்தப் பணத்தில் அல்ல!

அப்படியிருக்கும் போது - ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த – அதுவும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு அநாகரிகமாக - அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட மருத்துவர் என்ற பெயரில் இருக்கும் சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக நியமித்திருப்பது, பச்சை அதிகார துஷ்பிரயோகம்!

பெண்களின் கண்ணியம் குறித்தோ, அவர்களுக்குக் கவுரவம் அளிக்க வேண்டும் என்பது பற்றியோ, எந்தக் காலத்திலும் பா.ஜ.க. கவலைப்படுவதில்லை என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது என்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிகழ்வாக அமைந்து விட்டது.

பெண்ணினத்திடம் பா.ஜ.க.விற்கு இருக்கும் வெறுப்புணர்வை இந்த நியமனம் மிகத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. இதுதான் பா.ஜ.க. “பிராண்ட்” கலாச்சாரமா?

பெண்ணை அவமானப்படுத்திய மருத்துவர் சுப்பையா சண்முகம் இடம்பெற்றுள்ள குழுவிற்கு, எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியின் துணை வேந்தராக இருக்கும் மரியாதைக்குரிய டாக்டர் சுதா  சேசையன் அவர்களையும் உறுப்பினராக நியமித்து அவரையும் மத்திய பா.ஜ.க. அரசு அவமானப்படுத்தியிருக்கிறது.

பெண்களின் பெருமை குறித்த உயர்ந்த சிந்தனை கொண்ட திருமதி. சுதா சேசையன் அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவிலிருந்து விலகி விடுவதுதான் அவருக்கும்  கண்ணியம்; அவர் இதுவரை கட்டிக்காத்து வந்த நேர்மைக்கும் அடையாளமாக இருக்கும்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவினை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மருத்துவர்  சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக, தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் இடமளித்து - ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மருத்துவர் சுப்பையா சண்முகத்தை நீக்கி விட்டு - தமிழக எம்.பி.க்களுக்கு நிர்வாகக்குழுவில் இடமளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்கள் உடனடியாக பிரதமருக்குக் கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கத்தில் உருப்படியான நடவடிக்கை எதையும் கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாக முன்னெடுக்காத மத்திய பா.ஜ.க. அரசு, இப்படிப்பட்ட கோணல் புத்தியுள்ள ஒருவரை நிர்வாகக் குழுவில் இணைத்து, பெண்ணினத்தை அவமானப்படுத்திடும் வகையில் அமைத்திருப்பது,  தமிழர் பண்பாட்டு அடையாளமாம் கற்புக்கரசி கண்ணகி நீதி கேட்ட மூதூர் மதுரை மாநகரத்தையே அதிர்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சுப்பையா சண்முகம் என்பவரை உறுப்பினராக, நடுவண் அரசு அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. இவர், கார் நிறுத்த இடப் பிரச்சினைக்காக, அண்டை வீட்டுக்காரரிடம் அடாவடி செய்ததாக, சமூக வலைதளங்களில் காணொளிகள் வெளியாகின; 62 வயதுப் பெண்ணுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக, இவர் மீது, காவல்துறையில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இவ்வாறு பண்பாடு அற்ற முறையில் நடந்துகொண்ட இவரை, இயக்குநர் குழுவில் இடம் பெறச் செய்து இருப்பது, எய்ம்ஸ் என்ற உயர்ந்த மருத்துவ நிறுவனத்தின் மதிப்பைக் குறைக்கின்ற செயல் ஆகும்.

இவர், ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர்; பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் பொறுப்பு வகித்தவர். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் முதல், நடுநிலையாக இயங்க வேண்டிய அனைத்து நிறுவனங்களிலும், சங் பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு வந்து திணித்து வருகின்றது. அவர்களும், முடிந்த அளவுக்கு அந்த அமைப்புகளைச் சீர்குலைத்து வருகின்றார்கள்.

மதுரை எய்ம்ஸ் இயக்குநர்கள் குழுவில் இருந்து சுப்பையா சண்முகத்தை நீக்க வேண்டும் என நடுவண் அரசை வலியுறுத்துகின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.