வரும் நவம்பர் 1ஆம் தேதி மெரினா கடற்கரை பொது மக்களுக்காகத் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்றைய தினம் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர் மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் ரூ. 500 வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் - லூப் சாலையை புணரமைப்பது, மீன் கடைகளை ஒழங்குபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து சென்னை மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு செப்டம்பர் 29ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது பல்வேறு துறைகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இவ்வழக்கு மீண்டும் அக்டோபர் 5ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கடற்கரைகள், திரையரங்குகள் ஆகியவற்றைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் வழக்கு மீண்டும் இன்று (அக்டோபர் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினாவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை எப்படிச் சரி செய்யப் போகிறீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், "லூப் சாலையில் 65 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருப்பதாகவும், வாழ்வாதாரம் இழந்ததால் வியாபாரிகள் வியாபாரம் செய்ய வந்துவிட்டதாகவும், மீனவர் சங்கத் தலைவர்களுடன் கலந்து பேசி இனிமேல் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து மீன் சந்தை அமைப்பது, நடை மேம்பாலம் அமைப்பது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, நிலத்தை வகை மாற்றம் செய்வது தொடர்பான கோப்பு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து வரும் நவம்பர் 11ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு எப்போது அனுமதி அளிக்கப்படும் என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அனுமதி வழங்குவது குறித்து அரசு தான் முடிவு எடுக்கும் என்று ஆணையர் பிரகாஷ் குறிப்பிட்டார். இதை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் மாதம் முதல் மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், தமிழகத்தில் உள்ள கடற்கரைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதுபோன்று காலை, மாலையில் மெரினா கடற்கரையில் தினசரி நடைப்பயிற்சி மேற்கொள்ளக் கடற்கரையைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், நீதிபதிகளும் மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சி செய்தால் எல்லாம் சரியாகும் என்று தெரிவித்து வழக்கை நவம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் எம்.எஸ்.ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் காணொலி காட்சி மூலம் ஆஜராகினர்.