நாகர்கோவில் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் பெண் டாக்டர் உள்பட பல பெண்களை ஏமாற்றி ஆபாசப் படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், காசியை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்படி, காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் மெம்மரி கார்ட், காசி பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பல பொருட்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன. காசியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

இதனையடுத்து காசியின் நண்பன் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்து, அவனிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின்படி, காசியின் நெருங்கிய கூட்டாளியான தினேஷ் பற்றிய பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தது. 

முக்கியமாக, காசியை மிஞ்சும் அளவுக்கு அவனது நண்பன் தினேஷ், பல பெண்களை ஏமாற்றியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்ததும், பல பெண்களின் ஆபாசப் படம் அவனிடம் இருப்பதாகவும் தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் காசியின் நண்பனும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவருமான தினேஷை அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காசி மீது மேலும் பல வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், காசியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். அதன் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 100 க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த வழக்கில் காசியின் நண்பர் தினேஷுக்கு ஜாமீன் கிடைத்து. ஆனால், நாகர்கோவில் காசிக்கு மட்டும் ஜாமீன் கிடைக்காத நிலையில், அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய காசி மீது சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு கல்லூரி மாணவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார். சிபிசிஐடி போலீசாரிடம் அளிக்கப்பட்டுள்ள இந்த புகாரின் அடிப்படையில், காசியின் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் காசி மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக காசியை 10 நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காகக் காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் நாகர்கோவில் ஜே.எம்.1 நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர். இதனால், நாகர்கோவில் காசி வழக்கு மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

இதனிடையே, சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட 4 பேர் ஏற்கனவே காசி மீது புகார் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இந்த வழக்கில் மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.