இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை இல்லை என உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதில் மற்றவர்களும் இணைய வேண்டும் என தற்போது திருமாவளவன் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது :

``முகேஷ் குமார் - எதிர் -உத்தரகாண்ட் மாநிலம் என்ற வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற அமர்வு இட ஒதுக்கீட்டை தகர்க்கும் விதமாக அந்தத் தீர்ப்ப்பில் கருத்துகளைத் தெரிவித்தது. இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை இல்லை என்றும், இட ஒதுக்கீடு வழங்குமாறு எந்த ஒரு அரசாங்கத்துக்கும் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், இட ஒதுக்கீடு சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கிறதா என்று அரசாங்கத்தை நீதிமன்றம் மூலமாக கேட்க முடியாது என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது . இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக புதைகுழிக்குள் தள்ளுகிற இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாகேஸ்வரராவ் இப்பொழுது பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். அங்கும் இதே கருத்தைத்தான் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.  இந்த தீர்ப்பை அனுமதித்தால் எதிர்காலத்தில் இட ஒதுக்கீடு என்பதே இல்லாமல் போய்விடும். அதுமட்டுமின்றி இட ஒதுக்கீடு சரியாக நடைமுறைப்படுத்தாத மத்திய மாநில அரசுகளை எவரும் கேள்வி கேட்கவும் முடியாமல் ஆகிவிடும்.

உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; அது அரசாங்கமே மனமிரங்கிச் செய்கிற ஒன்று என்றே ஆகிறது. இது நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் கட்டிக் காத்து வரும் சமூகநீதிக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும். எனவே தான் இந்தத் தீர்ப்பை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வெளியான உடனேயே  வழக்கு தொடுத்தது. அது இப்போதுதான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. சமூக நீதியில் அக்கறை உள்ளவர்கள் இந்த வழக்கில் தம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, கடந்த ஜூன் மாதம், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியிருந்தது, இங்கே கவனிக்கத்தக்கது. அவர் அப்போது கூறுகையில், ``இட ஒதுக்கீட்டை அடிப்படை உரிமையாக மாற்றுவதற்கு இந்திய அரசியமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``கடந்த சில ஆண்டுகளாகவே இட ஒதுக்கீடு, சமூகநீதி தொடர்பான வழக்குகளில் எதிர்மறையான  தீர்ப்புகளையே உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் வழங்கி வருகின்றன. இது சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடு என்பது ஒருபுறமிருக்க, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளை தவறாக புரிந்து கொள்வது தான் இதற்கு காரணம் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான  பிரிவுகள் மூன்றாவது பகுதியில் தான் இடம் பெற்றுள்ளன. அரசியலமைப்பு சட்டத்தின் மூன்றாவது பகுதியே அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்டது ஆகும். இட ஒதுக்கீடு என்பது மக்களின் உரிமை என்பதற்கு அது அரசியல் சட்டத்தின் மூன்றாவது பகுதியில் இடம் பெற்று இருப்பதே போதுமானதாகும்" என்றார் அவர்.