“தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்” என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் தெரிவித்து உள்ளார்.

“பாஜகவுடன் கூட்டணி வைத்ததே தேர்தல் தோல்விக்குக் காரணம் என்றும், அதனால் தான் சிறுபான்மையினர் வாக்குகளை இழக்க நேரிட்டது” என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மிக கடுமையாக பாஜகவை விமர்சித்துப் பேசிய அந்த இரு கட்சிகளின் கூட்டணிக்குள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டது.

அதாவது, விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டமானது வானூர் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டு பேசிய போது, “திமுக ஆட்சிக்கு வரவேண்டும் எனப் பெருவாரியான மக்கள் விருப்பப்பட்டு வாக்களிக்கவில்லை” என்று, குறிப்பிட்டார். 

“நாம் 3 வது முறையாக ஆட்சியில் அமர்ந்திருப்போம் என்றும், ஆனால், நாம் தோல்வியடைந்ததற்குக் காரணம் பாஜக கூட்டணி தான்” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

அத்துடன், “பாஜக கூட்டணியால், நாம் முழுமையாகச் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம் என்றும், சிறுபான்மையினருக்கு நம் மீதோ, நமது கட்சியின் மீதோ, நமது பத்தாண்டுக் கால ஆட்சியின் மீதோ எந்த கோபமும் வருத்தமும் இல்லை” என்றும், சி.வி.சண்முகம் பேசினார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாஜகவினர் ஒவ்வொருவராக தங்கள் தரப்பு நியாயத்தைக் கூறி வருகின்றனர்.

அதன் படி, பாஜக வின் மாநிலச் செயலாளர் கே.டி. ராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகக் கருத்துக்களைத் தெரிவித்து உள்ளார்.

அதில், சி.வி.சண்முகத்தின் டிவிட்டர் கணக்கை டேக் செய்து பதிவிட்டுள்ள கே.டி.ராகவன், “அதிமுகவால் தான் பாஜக தோற்றது என்ற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது” என்று, அவர் விமர்சித்து உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “பாஜக குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறிய கருத்து கூட்டணியில் சண்டை ஏற்படுத்தும் முயற்சி என்றும், இதற்கு அதிமுக தலைமை பதில் அளிக்க வேண்டும்” என்றும், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், “பாஜக வுடன் கூட்டணி என தெரிந்துதான் தேர்தலில் நின்றார் என்றும், தேர்தலில் தோற்ற பிறகு பாஜக மீது குற்றம்சாட்டுவது ஏற்க முடியாது என்றும் பேசிய அவர், இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் கண்டிப்பாக இதற்குப் பதில் அளிக்க வேண்டும் என்றும், அப்போது தான் இதற்குக் குழப்பம் இல்லாமல் இருக்கும்” என்றும், அவர் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், சி.வி.சண்முகத்தின் சர்ச்சைக்குரிய கருத்திற்குப் பதிலடி தரும் விதமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், விளக்கம் அளித்து உள்ளார்.

அதன் படி, “பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்து உள்ளது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

முக்கியமாக, “தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றும், இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை” என்றும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.

இதன் மூலமாக, “பாஜகவால் தான் அதிமுக தேர்தலில் தோல்வி அடைந்த‌து என்ற சி.வி. சண்முகத்தின் கருத்து சர்ச்சையான நிலையில், அதற்கு ஓ.பன்னீர்செல்வம் தற்போது முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.