புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையில் கடந்த புதன்கிழமை நடந்த அலுவலக கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் போது மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் நச்சு திரவம் கலந்து இருப்பதாக புதுச்சேரி தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 


அந்த புகாரில், ‘’ புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளரால், குடிநீர் பாட்டில் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த குடிநீர் பாட்டிலில் நிறமில்லா நச்சு திரவம் இருப்பது கண்டறியப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தனியார் நிறுவனம் வழங்கக் கூடிய குடிநீர் பாட்டிலில் நச்சு திரவம் இருப்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.  சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. ” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


மேலும் இந்த சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.