தமிழகத்தில் பொதுமக்கள் உள்பட அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வரிசையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த செப்டம்பர் 22 ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து விஜயகாந்தின் மனைவியும், தே.மு.தி.க. பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் மணப்பாக்கத்தில் உள்ள தனியார் 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்களில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மேலும், ஏழை, எளியோருக்கு கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிலையில், தான் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்து. ஏற்கெனவே அவருக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் இருப்பதால், கொரோனா உறுதியாகியிருந்த தகவல், அவரின் ஆதரவாளர்களுக்கு, வேதனை தந்தது. இந்த தகவல் விஜயகாந்த்தின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. அதிலும் இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவலால் தேமுதிக கட்சி நிர்வாகிகளுக்கிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் பிரேமலதா விஜயகாந்துக்கு பாதிப்பு உறுதியானது. அது, அக்கட்சியினரை மேலும் பாதித்தது. அப்படியான சூழலில் பாதிப்பு உறுதியாகி, மூன்று நாள்கள் ஆகிய நிலையில், அக்டோபர் 2 மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

``கொரோனா பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இருவரும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததன் மூலம் 2 பேரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்" என்று கூறப்பட்டது.

மருத்துவமனை அறிவித்ததை போலவே, விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் அன்று மாலையே வீடு திரும்பினர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக வீடு திரும்பிய விஜயகாந்த், அக்டோபர் 6 ம் தேதி இரவு திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள செய்தியில், `விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். விஜயகாந்த் நலமுடன் உள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையும், அவர் விரைவில் மீண்டுவிடுவார் என தெரிவித்தது.

"விஜயகாந்த் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சீரான திட்டமிடப்பட்ட தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு கதிரியக்க மதிப்பீடு செய்யப்பட்டது. விஜயகாந்த் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று மருத்துவமனை நிர்வாகமும் விளக்கம் அளித்திருந்தது. 

அதன்படி, விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். தொடர் கண்காணிப்பின் மூலம் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மேற்கொள்ளப்பட்ட அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தனியார் மருத்துமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது