மதுரையில் ஓடும் பேருந்தின் மீது நடந்து வந்து ரகளை செய்த மர்மநபர் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பகுதியில், சிங்கம்புணரியில் இருந்து அரசுப் பேருந்து ஒன்று மெதுவாக வந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்தின் மேற்கூரையில் திடீரென மர்ம நபர், ஒருவர் ஏறினார். பின்னர் பேருந்து மேற்கூரையில், சாகச வீரரை போன்றதொரு பாவனையில், அந்த மர்ம நபர் நடந்து சென்றார்.

பேருந்து மீது மர்மநபர் ஒருவர் நடந்து கொண்டிருந்ததை, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மக்கள் பார்த்து கத்தி கூச்சலிட்டனர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.

ஓடும் பேருந்து சட்டென நிறுத்தப்பட்டதால், இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த மர்மநபர் மேற்கூரையில் இருந்து பேருந்துக்கு முன்பக்கமாக கீழே விழுந்தார். ஓடும் பேருந்து கூரையில் இருந்து விழுந்த வேகத்தில், அந்த மர்மநபருக்கு அடிபட்டிருக்குமோ என்று சாலையோரத்தில் இருந்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

ஆனால் அந்த மர்மநபரோ, கீழே விழுந்த வேகத்தில் அடி எதுவும் படாமல், காயங்கள் இன்றி பதட்டமடையால் கெத்தாக எழுந்து சென்றார். இந்த சம்பவத்தை சாலையோரத்தில் இருந்த மக்கள், தங்களது செல்ஃபோனில் படம் பிடித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து காவல்துறையினர், ஓடும் பேருந்து மேற்கூரையின் மீது நடந்து வந்த நபர் யாரென்று விசாரணை நடத்த ஆரம்பித்தனர். அந்த விசாரணையில், ஓடும் பேருந்தில் சாகசம் புரிந்த அந்த மர்மநபர், சென்னகரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பதும், மனபிறழ்வு கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மதுரை மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.