தஞ்சாவூரில் கடப்பாரையை கொண்டு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது. ஏடிஎம் மையத்தில் பதிவான கைரேகைகளை வைத்து திருவிடைமருதூர் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

atm

தஞ்சாவூரில் பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூரில் பேங்க் ஆப் பரோடா வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இம்மையத்தில் கடந்த 4 தினங்களுக்கு முன்பு பணம் நிரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரை கம்பியை கொண்டு உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
இதனையடுத்து ஹைதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு ஏடிஎம் மையம் உடைக்கப்படுவது குறித்து சிக்னல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வங்கி நிர்வாகம் உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் மக்கள் அங்கு வருவதை பார்த்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
உரிய நேரத்தில் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. கொள்ளை முயற்சி சம்பவத்தில் மூன்று நபர்கள் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். ஏடிஎம் மையத்தில் பதிவான கைரேகைகளை தடய அறிவியல் நிபுணர்கள் பதிவு செய்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து திருவிடைமருதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.