“வசமாக சிக்கும் அண்ணாமலை” 24 மணி நேரம் கெடு விதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி!

“வசமாக சிக்கும் அண்ணாமலை” 24 மணி நேரம் கெடு விதித்த அமைச்சர் செந்தில் பாலாஜி! - Daily news

“எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து புரிதலின்றி விமர்சம் செய்துள்ள அண்ணாமலை, தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி அடுத்த 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும், இல்லை என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

அதாவது, தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, பொறுப்பு ஏற்றுக்கொண்டது முதல், பல்வேறு விசயங்கள் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். இதனால், பாஜகவைச் சேர்ந்த அண்ணாமலை தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

அதாவது, சென்னை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்க திட்டம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து, அண்ணாமலை சில விமர்சங்களை முன் வைத்திருந்தார்.

அதன் படி, “திமுக குடும்பத்திற்கு நெருக்கமான பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்திற்கு, 4,442 கோடி ரூபாய்க்கு டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கியுள்ளது என்றும், தரம் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் விமர்சனம் செய்திருந்தார். 

அத்துடன், “கடந்த நிதியாண்டு இந்த நிறுவனம் 350 கோடி ரூபாய் கடனில் இருந்தது என்றும், வங்கியில் வெறும் 35 கோடி மட்டுமே கையிருப்பு வைத்திருந்த நிறுவனத்திற்கு, இவ்வளவு பெரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளது” என்றும், அவர் விமர்சனம் செய்திருந்தார். 

மேலும், “திமுக ஆட்சி முடிவதற்கு முன்னர் 35,000 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது என்றும், டான்ஜட்கோ ஒப்பந்தம் வழங்கினால் முந்தைய திமுக ஆட்சி காலம் போல் அடுத்த ஆண்டு முதல் மீண்டும் மின்வெட்டு தொடங்கும்” என்றும், அண்ணாமலை பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.

இதனையடுத்து, அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை மறுத்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த விவகாரம் குறித்து விளக்கமும் அளித்து உள்ளார். 

இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதல் இல்லை” என்று, குறிப்பிட்டார்.

அத்துடன், “அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் அண்ணாமலை விமர்சித்து உள்ளார் என்றும், கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய பணிகள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முடியாமல் இருந்தன” என்றும், அவர் சுட்டிக்காட்டி கூறி உள்ளார். 
மேலும், “குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்து கொள்வது அவசியம் என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டு மின் திட்டங்களுக்கு வைப்பு தொகை 3 சதவீதமாக மாநிலங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது” என்றும், அவர் தெரிவித்தார். 

“கடந்த 2019 ஆம் ஆண்டில் போடப்பட்ட திட்ட மதிப்பீட்டின் படியே தற்போது ஒப்பந்தம் தரப்பட்டு உள்ளது என்றும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே மின்வாரிய திட்டங்களுக்கு வைப்புத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டது” என்றும், அவர் கூறினார்.

குறிப்பாக, “அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி அடுத்த 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும் என்றும்,  அண்ணாமலை கூறிய புகாரை நிரூபிக்காவிட்டால் சட்டப்படி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

முக்கியமாக, “மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நன்கு அறிந்த பிறகே விமர்சிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாத அளவிற்கு சீரான மின் விநியோகம் நடைபெறுகிறது” என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவுப்படுத்தினார்.

Leave a Comment