நகைச்சுவை மன்னன் வைகை புயல் வடிவேலு அவர்கள் தற்போது தமிழ்த் திரையுலகில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழும் வைகைப்புயல் வடிவேலு நகைச்சுவையை மையப்படுத்திய கலகலப்பான காமெடி என்டர்டெய்னர் திரைப்படங்களிலும் முன்னணி கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.

அந்த வகையில் திரையில் மீண்டும் வைகைப்புயல் வடிவேலுவை காண நீண்ட காலமாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அறிவிக்கப்பட்டது நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம். பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கிய தலைநகரம் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரத்தின் பெயரை கொண்டு உருவாகும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தையும் இயக்குனர் சுராஜ் இயக்குகிறார்.

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் வைகை புயல் வடிவேலுவுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ் மற்றும் VJ விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். 

சந்தோஷ் நாராயணன் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.  முன்னதாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் சந்தோஷ்நாராயணன் இசையில் வைகைப்புயல் வடிவேலு ஒரு பாடலை பாடுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (மார்ச் 1-ஆம் தேதி) வெளியான நிலையில், விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளரும் பிரபல நடிகையுமான ஷிவானி நாராயணன் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பு தற்போது வெளியானது.

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு உடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இதனை அறிவித்துள்ளார். முன்னதாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்திலும் ஷிவானி நாராயணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.