தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. பக்கா கமர்ஷியல் ஹீரோவாக அறிமுகமாகி பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். கார்தஈ நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் உலகளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது கார்த்தி இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்ட வேலையில் இருக்கும் ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. மேலும் கார்த்தி அதை தொடர்ந்து ஸ்டுயோ க்ரீன் தயாரிப்பில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையினர் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள் திரளுடன் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் நடிகர் கார்த்தி. போதை பொருள் எதிராகவும் அதனால் வரும் பாதிப்புகள் குறித்தும் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கார்த்தி அறிவுரை வழங்கினர்.
விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது, ”இன்றைய காலக்கட்டத்தில் போதைப்பொருட்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. இதனை பயன்படுத்தும் இளைஞர்களின் வயது வரம்பும் குறைந்துகொண்டே வருகிறது. முன்பெல்லாம் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மது அருந்தினர். இப்போது பள்ளி மாணவர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாகிவிட்டனர். பள்ளிகளுக்கு அருகே கூட போதைப்பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் போதைப்பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும்.மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இது சீரியஸான விஷயம். போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்கள் தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டு பேசினார் நடிகர் கார்த்தி. தற்போது கார்த்தியின் அறிவுரை ரசிகர்களால் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.