மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஸ்பெசலாக 7 திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். 

சென்னை, தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அதன்படி,

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. எனினும், கொரோனா தொற்று காரணமாக, “கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் தொண்டர்கள் யாரும் ஈடுபட வேண்டாம்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன்பாக மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மேலும், கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதலமைச்சர் இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.

அதன் படி,

- கொரோனா நிவாரண நிதி உதவியின் 2 வது தவணையான 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

- தமிழ்நாடு அரசு அறநிலையத் துறையின் கீழ் 12,959 கோயில்களில் மாதச் சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக 4 ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி, 13 வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

- குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும், முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

- கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தையும், அவர் இன்று தொடங்கி வைக்கிறார். 

- கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர், மருத்துவப் பணியாளர், காவலர்கள், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கிறார். 

- திருநங்கையர் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி, திருநங்கையருக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தையும், அவர் இன்று தொடங்கி வைக்கிறார். 

- குறிப்பாக, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டப் பயனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

- மேலும், மாவட்டந்தோறும் ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அதன்படி, 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் விதம், 38,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன. 

- அதே போல், கலைஞர் நினைவிடத்தில் பணியாற்றி வரும் 38 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய பையையும், ஊக்கத் தொகையாக 2 ஆயிரம் ரூபாய் பணத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதன் படி, சற்று முன்பாக தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.