முன்னாள் நீதிபதியும், காவல் ஆணைய தலைவருமான சி.டி.செல்வத்தின் தனி பாதுகாப்பு அதிகாரியை மர்ம நபர்கள் பட்ட பகலில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அசோக் நகர் சந்திப்பில் தான், பட்ட பகலில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதுவும், சி.டி.செல்வம் தனது காரில் அமர்ந்திருந்த போதே அவரது தனி பாதுகாப்பு அதிகாரியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளனர்.

அதாவது, சென்னை அசோக் நகர் சந்திப்பில், முன்னாள் நீதிபதியும் தற்போதைய காவல் ஆணைய தலைவருமான சி.டி.செல்வம், இன்றைய தினம் காலை தன்னுடைய தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன், சென்னை அசோக் நகரில் காரில் சென்றுகொண்டிருந்தார். 

அந்த நேரம் பார்த்து, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், சி.டி.செல்வம் வந்த காரை வழி மறித்து உள்ளனர். 
அப்போது, சற்று அதிர்ச்சியடைந்த சி.டி.செல்வம் உட்பட அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள், காரை மறித்தது குறித்து கேள்வி கேட்டு உள்ளார்.

அப்போது, சி.டி.செல்வம் அந்த காரில் இருந்த போதே, அந்த 3 மர்ம நபர்களும் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து  முன்னாள் நீதிபதியும், காவல் ஆணைய தலைவருமான சி.டி.செல்வத்தின் தனி பாதுகாப்பு அதிகாரியை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர்.

பின்னர், அங்கிருந்து அந்த 3 பேரும் தப்பித்து ஓடி உள்ளனர். இதனால், சி.டி.செல்வம் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில், உடனடியாக இது குறித்து, அந்த பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடது. 

இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரைணை நடத்தி வருகின்றனர். 

மேலும், பட்டபகலில் நரைடபெற்ற இந்த கொலை முயற்சி தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 
முக்கியமாக, இந்த சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜவால், விசாரணை மேற்கொண்ட நிலையில், “அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளிகள் குறித்த விசாரணை நடத்தி வருவதாகவும்” தெரிவித்தார். 

அதே போல், “ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம், அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில், காவலர்களுக்கு பயிற்சி அளிக்க சென்ற போதுதான், இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதாகவும், கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னையில் அதுவும் பட்டபகலில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரி மர்ம நபர்களால் தாக்கிவிட்டு தப்பித்துச் சென்ற அந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.