அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையின்போது  சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் மார்ச் 21-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே சம்மன் அனுப்பியது.மேலும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி,ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா அண்ணன் மனைவி இளவரசி நேற்று ஆஜராகினார். இவரிடம் 10:30 - 11:30 மணி வரை விசாரணை நடைபெற்றது. அப்போது, "அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது சசிகலா மட்டுமே உடனிருந்து பார்த்துக் கொண்டார் எனவும்,75 நாட்களும் மருத்துவமனைக்கு தான் சென்று வந்ததாகவும்,ஆனால் ஓரிரு முறை மட்டுமே கண்ணாடி வழியாக ஜெயலலிதாவை பார்த்ததாகவும் இளவரசி ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியதாக தகவல் வெளியாகியது.

மேலும், 2014-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது மன உளைச்சலுடன் இருந்தார். 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அவரது உடல்நலக்குறைவுடன் இருந்தார் எனவும் இளவரசி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேற்று ஆஜராகினார். அப்போது நடைபெற்ற விசாரணையில்,ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்று ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், 2016-ம் ஆண்டு செப்.22-ம் தேதி ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார்? என்ன சிகிச்சை வழங்கப்பட்டது என்று தனக்கு தெரியாது, அந்த சமயத்தில் தான் சொந்த ஊரில் இருந்ததாகவும், உதவியாளரின் மூலம்தான் இந்த தகவல் கிடைத்ததாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிறகு ஜெயலலிதாவை பார்க்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் அதன்பின்னரே, அடுத்த நாள் சென்னை வந்து மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த தலைமைச்செயலாளரிடம் விவரங்களை கேட்டதாகவும், மேலும், ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்ததை தவிர வேறு உபாதைகள் அவருக்கு இருந்தது தனக்கு தெரியாது என்றும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் மெட்ரோ ரயில் நிகழ்வில் கலந்து கொண்டபோது ஜெயலலிதாவை பார்த்ததாகவும்,அதற்கு பின்னர் அவரை பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற முறையில் ஆணையத்தின் கோப்பில் தான் கையெழுத்திட்டதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியது.

மேலும், "மருத்துவமனையில் காவிரி விவகாரம் குறித்து ஜெயலலிதா நடத்திய ஆலோசனை கூட்டம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.இது தொடர்பாக அறிக்கை வந்த பின்பே, அக்கூட்டம் குறித்து எனக்கு தெரிய வந்தது,ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விஜய பாஸ்கரிடம் தான் கேட்டறிந்தேன்", என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஓபிஎஸ் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உணவு இடைவேளை விடப்பட்டுள்ளது. இடைவேளைக்கு பின்னர் 3 மணியளவில் அவரிடம் மீண்டும் விசாரணை நடைபெற்றது. சிசிடிவிகளை அகற்ற கூறவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேற்று காலை மற்றும் பிற்பகல் நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் இதுவரை 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்த விசாரணையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவிகளை அகற்ற கூறவில்லை என்றும் தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானது எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இன்றும் விசாரணைக்கு ஆஜராக ஓபிஎஸ்-க்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் ஓ.பன்னீர்செல்வம் ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. அப்போது ஆணையத்தின் சார்பில், இடைத் தேர்தலையொட்டி அந்த படிவங்களில் ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டது தெரியுமா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரது உடல்நலம் குறித்து சசிகலா என்னிடம் ஓரிரு முறை ஜெயலலிதா நன்றாக இருப்பதாக கூறினார். இந்த தகவல் குறித்து நான் சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் இது தொடர்பாக நான் பேசவில்லை. அரசாங்கப் பணி தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்தவொரு தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறித்து எனக்குத் தெரியாது” என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறப்பதற்கு முன் நான் உட்பட 3 அமைச்சர்கள் நேரில் அவரை பார்த்தோம். எக்மோ பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய அமைச்சர் விஜயபாஸ்கர் என்னிடம் தெரிவித்தார் என கூறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான கேள்விகளை ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்பதற்கு அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது என்றே நேற்றே அவர் கூறிவிட்டார் என மருத்துவமனை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ள ஓ.பன்னீர்செல்வத்திடம் சசிக்கலா தரப்பு தற்போது குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.