அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின, மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வகுப்பு அறைகளுக்கு சென்று ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாணாக்கர்களிடம்‌ உரையாடினார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மரக்காணம் அருகே கடப்பாகத்தில் அமைந்துள்ள பெ. கிருஷ்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சற்று முன்பாக திடீரென்று சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனால், பள்ளியில் இருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் உற்சாகம் அடைந்தனர். அத்துடன், மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அந்த பள்ளியின் உள்ளே இருந்த ஒரு வகுப்பறைக்குள் சென்று, அங்கிருந்த மாணவர்களுடன் உரையாடினார். இதனால், அந்த வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

இதனையடுத்து, பள்ளியில் திடீரென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், “ 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தைத் துவக்கி வைக்க மரக்காணம் செல்லும் வழியில், கடப்பாக்கத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார். 

மேலும், “கொரோனா கால தளர்வுகளுக்குப் பின்னர் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் ஆர்வமுடன் கல்வியில் கவனம் செலுத்த அறிவுறுத்தினேன்” என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பதிவிட்டு உள்ளார்.

அத்துடன், பள்ளியில் முதலமைச்சர் திடீரென்று ஆய்வு மேற்கொண்டது பற்றி அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று விழுப்புரம்‌ மாவட்டம்‌, முதலியார்குப்பத்தில்‌ 'இல்லம்‌ தேடிக்‌ கல்வி' திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக செல்லும்‌ வழியில்‌, செங்கல்பட்டு மாவட்டம், கடப்பாக்கத்தில்‌ உள்ள திரு.பெ. கிருஷ்ணா அரசு மேல்நிலைப்‌ பள்ளிக்கு நேரில்‌ சென்று திடீர்‌ ஆய்வு மேற்கொண்டார்” என்று, குறிப்பிட்டு உள்ளது. 

“இந்த ஆய்வின்‌ போது, முதலமைச்சரிடம்‌, பள்ளியின்‌ தலைமை ஆசிரியர்‌ ஜெர்னாஸ்‌ ஜான்‌‌, இப்பள்ளியில்‌ மொத்தம்‌ 488 மாணாக்கர்கள்‌ படித்து வருவதாகவும்‌, தற்போது 9 முதல்‌ 12 ஆம்‌ வரையிலான வகுப்புகள்‌ நடைபெற்று வருவதாகவும்‌, மாணாக்கர்கள்‌ வருகை சிறப்பாக உள்ளதாகவும்‌ தெரிவித்தார்” என்றும், குறிப்பிடப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வகுப்பு அறைகளுக்கு சென்று ஆசிரியர்கள்‌ மற்றும்‌ மாணாக்கர்களிடம்‌ உரையாடினார் என்றும்‌, கல்வியில்‌ மிகுந்த கவனம்‌ செலுத்துவதோடு, ஆசிரியர்கள்‌, மாணாக்கர்கள்‌ அனைவரும்‌ கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளையும்‌ தவறாமல்‌ பின்பற்ற வேண்டும்‌ என்றும்‌ அறிவுறுத்தினார்‌” என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “பள்ளியின்‌ அனைத்து வகுப்பு அறைகள்‌, ஆய்வகம்‌, உணவு தயாரிக்கும்‌ கூடம்‌ ஆகியவற்றையும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பார்வையிட்டதோடு, மாணாக்கர்களுக்கு தினசரி உணவு வழங்கும்‌ பட்டியலில்‌ உள்ளவாறு மதிய உணவு தயாரிக்கப்படுகிறதா என்பதையும்‌ முதலமைச்சர் ஆய்வு செய்தார்‌” என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.