ஆடு மேய்க்க சென்ற இளம் பெண்ணை, 2 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம்  அம்மாபேட்டை அருகே சூழியக்கோட்டையில் ஆடு மேய்க்கச் சென்ற கனக வள்ளி என்ற இளம் பெண், இரவு ஆகியும் வீடு திரும்பி வில்லை. 

ஆடு மேய்க்க சென்ற மகள் காணாத நிலையில், அவரது பெற்றோர் அவரை தேடிச் சென்று உள்ளனர். 

அப்போது, அந்த பகுதியில் உள்ள ஒரு புதரில் அந்த இளம் பெண் ஆடைகள் கலைந்து கிடந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்து உள்ளார்.

இதனால், பதறிப்போன அந்த இளம் பெண்ணின் குடும்பத்தினர், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட இளம் பெண், இறப்பதற்கு முன்பாக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதன் பிறகே அவர் கொல்லப்பட்டது தெரிய வந்தது. 

கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில், விசாரணை மேற்கொண்டு வந்த தனிப்படை போலீசார், ஒரத்தநாடு அருகே ஆற்றங்கரையோரம் பதுங்கி இருந்த குற்றவாளிகளான 30 வயதான பெரியசாமி, 25 வயதான சதீஷ் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து, அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், “ஆடு மேய்க்க வந்த இளம் கனக வள்ளியை பலாத்காரம் செய்ததை” அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 

அத்துடன், இந்த வழக்கில் மற்றொருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அந்த நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருவதாகவும்,  போலீசார் தரப்பில் தெரிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.