“பிஞ்சுப் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கிய போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில் ஹரி சர்வதேசப் பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு தயங்குவது ஏன்?” என்றும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாட்டில் புகழ்பெற்றுத் திகழும் பல பள்ளிக்கூடங்கள் தொடர்ச்சியாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தொடர்ந்து சிக்கி வருகின்றன. இப்படி, பள்ளிக்கூடங்கள் மீது எழும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து 2 நாட்கள் பெரிய அளவில் பேசப்படுவதும், அதன் பிறகு அந்த வழக்கு பற்றிய எந்த தகவலும் வெளியாகாமலும், அப்படியே மாயமாவதுமாகக் கடந்த காலங்களில் இருந்து வந்திருக்கின்றன.

இப்படியான நிலையில் தான், தற்போது “போலி ஆன்மிகவாதி சிவசங்கர் பாபா மீதும், சுஷில்ஹரி சர்வதேசப் பள்ளி மீதும்” தற்போது புதிதாக பாலியல் புகார்கள் எழுந்து உள்ளன.

இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி சர்வதேசப் பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா, அந்த பள்ளியில் பிஞ்சுப் பிள்ளைகள் மீது நிகழ்த்தி வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளி வந்திருக்கும் செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன” என்று, குறிப்பிட்டு உள்ளார்.

“அந்த பள்ளிக்கூடத்தில் படித்த மாணவிகள் அங்கு நடந்த கொடூரங்களை விளக்கும் குரல் பதிவுகளும், கேள்விப்பட செய்திகளும் ஈரக்குலையைக் கொதிக்கச் செய்திருக்கின்றன” என்று, மிகவும் ஆவேசமாகத் தெரிவித்து உள்ளார். 

“பள்ளி எனும் கல்விக்கட்டமைப்புக்கு அனுமதி பெற்று, எவ்வித விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஆட்படாது என ஆன்மிகத்தின் பெயரைச்சொல்லி, தன்னை கடவுளாக உருவகப்படுத்திக் கொண்டு கல்வி பயில வரும் ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியும், இதற்கெதிராகக் குரல் கொடுக்க முயல்வோர் மீது அடக்கு முறையை ஏவியும் ஒடுக்குவதுமான பல ஆண்டுகளாகக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பாபா சிவசங்கர் போன்றவர்கள் கடும் தண்டனைக்குள்ளாகப்பட வேண்டியவர்கள்” என்றும், சீமான் வலியுறுத்தி உள்ளார். 

“ 'அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' எனும் ஆணாதிக்க ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, சமூகத்தில் தலை தூக்கவும், மேலே உயரவும் உதவும் ஒற்றைப் பேராயுதம் கல்வியே என்பதை உணர்ந்து, பள்ளிக் கூடத்திற்கு வரும் பிஞ்சுப்பிள்ளைகளை ஆன்மீகத்தின் பெயரால் தங்களது பாலியல் இச்சைகளுக்கு இரையாக்கிய சிவசங்கர் பாபா நிகழ்த்திய கொடுமைகளும், அத்து மீறல்களும் வெளியே வராது மூடி மறைக்கப்பட்டிருப்பது தற்செயலானதல்ல” என்றும், சீமான் சுட்டிக்காட்டி உள்ளார்.

குறிப்பாக, “ஆளும் வர்க்கத்தின் ஒத்துழைப்பில்லாது இத்தகைய கொடுஞ்செயல்களைச் சிவசங்கர் பாபா அரங்கேற்றியிருக்க முடியுமா? எனும் இயல்பான ஐயம் எழுவதை எனக்குள் தவிர்க்க முடிவதில்லை” என்றும், சீமான் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி உள்ளார். 

“ஆயிரக்கணக்கான பெண்களைப் பலிகொண்ட சமகாலத்தில் நடந்தேறிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல, இந்த சம்பவத்திற்குப் பின்னாலும் பெரும் வலைப்பின்னலும், ஆட்சியாளர்களின் தொடர்பும் இருக்கும் எனும் வாதத்தைப் புறந்தள்ளுவதற்கில்லை என்றும், பணபலமும், 

அரசியல் செல்வாக்கும், அதிகாரப் பின்புலமும், சமூக அங்கீகாரமும் இருக்கும் மமதையில், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் மிதப்பிலும், மனப்போக்கிலும் மனிதத்தன்மையற்று பிஞ்சுப்பிள்ளைகளைச் சிதைத்திட சிவசங்கர் பாபா போன்றவர்கள் சமூகத்தின் சாபக்கேடு.பள்ளி எனும் கல்விக் கூடத்தின் பெயரால் அதிகார மையங்களை அமைத்து, அதன் மூலம் தங்களது உடற்பசிக்குப் பிஞ்சுகளைக் குதறும் கயவர்களை எவ்விதப் பாரபட்சமில்லாது இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், தண்டிக்கவும், கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டியது பேரவசியமாகிறது” என்றும், சீமான் ஆவேசமாகத் தெரிவித்து உள்ளார். 

“சமூகத்தின் மேல் தட்டிலிருக்கும் மனநிலையில் கொஞ்சம் கூட ஈவு இரக்கமற்று அப்பாவிப் பெண் குழந்தைகளைப் பலிகடாக்கிய சிவசங்கர் பாபா இச்சமூகத்தில் இன்னும் சுதந்திரமாக வாழ்வது வெட்கித் தலைகுனியச் செய்கிறது” என்றும், தனது வருத்தத்தையும், ஆதங்கத்தையும் பதிவு செய்து உள்ளார். 

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து, பாதிக்கப்பட்ட பிள்ளைகள் அதனை வெளிக்கொணரும் வேளையிலும் அப்பள்ளி மீதும், சிவசங்கர் பாபா மீதும் நடவடிக்கை எடுக்காது தமிழ்நாடு அரசு மெத்தனப்போக்கோடு இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது” என்றும், அவர் சாடி உள்ளார். 

“இந்த விவகாரத்தில், தமிழ்நாடு குழந்தைகள் நல உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள் ஒப்புக்குப் பள்ளிக்குச் சென்று விசாரணை எனும் பெயரில் பார்வையிட்டதைத் தவிர, எவ்வித முன்நகர்வும் இல்லாதது பெரும் ஏமாற்றமாகும் என்றும், பெண் பிள்ளைகளைப் பாலியல் வன்கொடுமைக்கு 

உள்ளாக்கியது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை என்று வரும் செய்திகள் பெரும் கவலையளிக்கிறது” என்றும், புதிய புதிய சந்தேகங்களைச் சீமான் எழுப்பி உள்ளார். 

“சிவசங்கர் பாபா மீதும், அப்பள்ளி மீதும் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு அரசு ஏன் தயங்குகிறது?” என்றும், சீமான் கேள்வி உள்ளார்.

“இனி மேலாவது முனைப்போடு செயல்பட்டு, பள்ளிக்கூடம் நடத்துவதாகக் கூறிக்கொண்டு, பாலியல் முறைகேடுகளையும், வன்கொடுமைகளையும் பல ஆண்டுகளாகச் செய்து ஆயிரக்கணக்கான பெண் பிள்ளைகளைச் சிதைத்திட சிவசங்கர் பாபா மீதும், அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து உடனடியாகச் சிறைப்படுத்த வேண்டும் என்றும், சுஷில்ஹரி சர்வதேசப் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும், சீமான் வலியுறுத்து கேட்டுக்கொண்டு உள்ளார்.