“எஜமான்” பட பாணியில், திருமணமான இளம் பெண் ஒருவர் கர்ப்பிணி நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புதுச்சேரியில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது, புதுச்சேரி மாநிலம் தருமபுரியைச் சேர்ந்த தமிழக ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசார் ஒருவருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. 

ஆனால், திருமணத்திற்கு பிறகு அவரது மனைவி கர்ப்பமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவரது மாமியார் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் பலரும் அவரை இது தொடர்பாக தொடர்ந்து கேள்வி கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, “நான் கர்ப்பமடைந்ததாகவும், எனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளதாக மருத்துவர்கள்” கூறி உள்ளதாகவும், அந்த பெண் தனது உறவினர்களிடம் கூறி வந்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், அந்த பெண்ணுக்கு ஏழாவது மாதம், ஒன்பதாவது மாதம் வளைகாப்பு நிகழ்ச்சிகளும் நடந்து உள்ளன.   

அத்துடன், “கடந்த டிசம்பர் மாதம் குழந்தை பிறக்கும்” என்று, அந்த பெண் கூறிய நிலையில், பிரசவம் தள்ளிப் போவதாக மருத்துவர்கள் கூறியதாக அந்த பெண் தனது மாமியார் வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

இதனால், சற்று சந்தேகம் அடைந்த உறவினர்கள், மருத்துவமனையில் பரிசோதனை செய்யச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள்.

இதனையடுத்து, நேற்று முன் தினம் ஜிப்மர் மருத்துவமனையில் அந்த பெண்ணை அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் அனுமதித்து இருக்கிறார்கள். ஆனால், அந்த பெண் மருத்துவமனையில் இருந்து திடீரென்று மாயமாகி உள்ளார்.

அதாவது, புதுச்சேரி மாநிலத்தில் ஜிப்மர் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிறைமாத கர்ப்பிணியான எனது மனைவியை காணவில்லை” என்று, அந்த பெண்ணின் கணவர் அங்குள்ள புதுச்சேரி கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, அந்த பெண் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

அதே நேரத்தில் “கணவரும், உறவினர்களும், போலீசாரும் தன்னைத் தேடி வருவதை” தெரிந்துகொண்ட அந்த பெண் தனது உறவினர்களுக்கு இன்று காலையில் போன் செய்து, “என்னை யாரோ கடத்திச் சென்று, என் வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை செய்து எடுத்துக்கொண்டு விட்டனர் என்றும், தற்போது என்னை ஒரு இடத்தில் தங்க வைத்து விட்டு சென்று ஓடி விட்டதாகவும்” கூறியிருக்கிறார்.

அப்போது, அந்தப் பெண் கோயம்புத்தூரில் இருப்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர்.

இதழனையடுத்து, அங்குள்ள மகளிர் போலீசாரின் உதவியுடன் அந்த பெண்ணை உடனே போலீசார் மீட்டிருக்கிறார்.

பின்னர், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீசாரின் இந்த விசாரணையில், “உண்மையிலேயே இந்த பெண் கர்ப்பம் அடையவில்லை” என்பது தெரிய வந்தது.

மேலும், “கர்ப்பம் அடைந்ததாக பொய் சொல்லி தனது கணவனையும் சக உறவினர்களையும் ஏமாற்றி வந்ததும்” தெரிய வந்தது.

அத்துடன், “இந்த பெண் சற்று குண்டாக இருந்த காரணத்தால், அவர் சொன்னதை கணவர் உட்பட சக உறவினர்களும் நம்பி இருக்கிறார்கள்” என்பதும் தெரிய வந்திருக்கிறது.

குறிப்பாக, “அறுவை சிகிச்சை செய்து என் குழந்தையை மர்ம நபர்கள் எடுத்துச் சென்று விட்டதாக நாடகமாடி இருப்பதும்” போலீசார் அதிரடியாக கண்டுப்பிடித்தனர்.

விசாரணையின் முடிவில் “குழந்தை இல்லை என்று உறவினர்கள் தொடர்ந்து கேட்டதால், நான் கர்ப்பமாகி விட்டதாக உறவினர்களையும், கணவரை நம்ப வைக்கவே, எஜமான் பட ஸ்டைலில் மீனாவை போல” இப்படி நடந்துகொண்டதும் தெரிய வந்தது. இச்சம்வம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.