ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா ஆகச் சிறந்த நடிகராகவும் மிகச்சிறந்த தயாரிப்பாளராகவும் தனது சிறந்த படைப்புகளின் வாயிலாக மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். மார்ச் 10ஆம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சூர்யா, முன்னதாக இயக்குனர் பாலா இயக்கத்தில் புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். மேலும் சூரரைப்போற்று வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

இதனிடையே கடந்த ஆண்டு(2021) தீபாவளி வெளியீடாக நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம். இயக்குனர் T.J.ஞானவேல் இயக்கத்தில் மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் துயரத்தைப் பேசும் படமாக வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தை நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருந்தார்.

சர்வதேச திரையுலகில் கவனத்தை ஈர்த்துள்ள ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கான முதல் பரிந்துரைப்பட்டியலில் தற்போது இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய திரையுலகில் ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்து ரசித்த பலரும் படக்குழுவினரை பாராட்டி வரும் நிலையில் தற்போது மலையாளத்தில் மெகா ஹிட்டான பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜெய்பீம் திரைப்படத்தை பார்த்த பிறகு படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ஜெய்பீம் பார்த்தேன்…மனதை ஆழமாக தொட்ட படம்… இப்படி ஒரு தைரியமான திரைப்படத்தை தயாரித்த சூர்யா சார்  மற்றும் ஜோதிகா மேடம் இருவரையும் நினைத்து பெருமை கொள்கிறேன்… ஒட்டுமொத்த நடிகர்கள் மற்றும் பட குழுவினருக்கு எனது மரியாதையும் அன்பும்!” என தெரிவித்துள்ளார்.