திருமணத்திற்கு காதலன் மறுத்ததால், அவரிடம் வீடியோ கால் பேசியபடியே, காதலி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராமநாதபுரம் அடுத்து உள்ள குயன்வடியைச் சேர்ந்த மேனகா என்ற இளம் பெண், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வந்தார்.

இந்த இளம் பெண், அங்குள்ள சடையன் வலசையைச் சேர்ந்த 27 வயதான தமிழ் செல்வன் என்ற இளைஞரை காதலித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. 

இப்படியாக, இவர்கள் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்த நிலையில், அந்த பகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர்கள் இருவரும் சென்று ஊர் சுற்றி வந்து, தங்களது காதலையும் வளர்த்து வந்ததாகவும் கூறப்படிகிறது.

இப்படியான சூழலில் தான், காதலியான நர்ஸ் மேனகா, தனது காதலனிடம் “என்னை சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி” வந்திருக்கிறார்.

ஆனால், அந்த காதலன், “நான் தற்போது பார்த்து வரும் வேலையில் இன்னும் முன்னேற வேண்டும் என்றும், நிரந்தர வருமானம் வந்த பிறகுதான் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியும்” என்றும் கூறியதாக கூறப்படுகிறது. 

இதனால், காதலர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த காதலி, நேற்று முன் தினம் இரவு வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்ததுடன், மிக கடுமையான அளவுக்கு மன உளைச்சலும் அடைந்திருக்கிறார்.

அப்போது, தனது காதலனிடம் வீடியோ காலில் பேசிய அந்த காதலி, “உடனே திருமணம் செய்ய வேண்டும்” என்று, வற்புறுத்தி இருக்கிறார்.

ஆனால், அப்போதும், அந்த காதலன் “இப்போது என்னால் திருமணம் செய்ய இயலாது” என்று கூறி, திருமணத்திற்கு மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.

இதனால், கடும் மன வேதனை அடைந்த அந்த காதலி, அந்த வீடியோ காலிலேயே காதலன் பார்க்கும் விதத்தில், அப்படியே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்து, தீக்குளித்து உள்ளார்.

இதனை வீடியோ காலில் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த காதலன், உடனே இந்த செயலை நிறுத்துமாறு அந்த பெண்ணிடம் அலறி துடித்து வேண்டிக்கொண்டுள்ளார். ஆனால், அந்த காதலி, தனது காதலன் பேச்சை துளியும் கேட்காமல் தனது உடலில் தீயை வைத்துக்கொண்டு அப்படியே தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இதில், மேனகாவின் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மகள் உயிரிழப்பு குறித்து, மேனகாவின் தந்தை தேவதாஸ், தாயார் நாகம்மை, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

அந்த புகாரில், “எங்கள் மகள் மேனகாவை, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான தமிழ் செல்வன், காதலித்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்ததால், எனது மகள் வீடியோ காலில் பேசியவாறு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும், இதனால் தமிழ்செல்வன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.