ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் எக்கசக்க எதிர்பார்ப்பில் காத்திருக்க மிகப் பிரம்மாண்ட படைப்பாக தயாராகிவருகிறது பொன்னியின் செல்வன். புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் அற்புதப் படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி தயாராகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி, சுந்தர சோழர், பூங்குழலி ஆகிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ் ராஜ் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பரபரப்பாக நடைபெற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் தொடங்கியுள்ளது.
 
2022-ஆம் கோடை விடுமுறை விருந்தாக பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டப்பிங் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் வனவன் மகாதேவி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகை வித்யா சுப்பிரமணியன் பொன்னியின் செல்வன் டப்பிங்கில் கலந்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.