“இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?” என்று, ரிப்போர்ட்டர் ஒருவரின் கேள்விக்கு “உங்களுக்கு நானும், ஷிகர் தவானும் டீமை விட்டு வெளியே போகனுமா?” என்று ரோகித் சர்மா, கிண்டலாக கலாய்த்து பதில் அளித்த சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், இன்றைய தினம் அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று முதல் நடைபெறும் இந்த போட்டிகள், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்கள் என்று வரும் 20 ஆம் தேதி வரை இந்த கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன.
அதன் படி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளுமே விளையாட இருக்கின்றன.

எனினும், இந்த கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த முக்கிய பேட்ஸ்மேன்களான ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பவுலர் சைனி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆகமதாபாத் வந்தடைந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அப்போது உறுதியானது. 

மேலும், இந்திய அணியில் இடம் பெற்றிருந்த 4 வீரர்கள் மற்றும் 3 கிரிக்கெட் அணியின் முக்கிய நிர்வாகிகள் என மொத்தம் இந்திய அணி தரப்பில் 7 பேருக்கு கொரோனா தொற்று தற்போது உறுதியாகி உள்ளது. 

“கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடையும் வரையில், அவர்கள் தனிமையில் இருப்பார்கள்” என்றும், பிசிசிஐ தெரிவித்தது. இதனால், இந்திய அணியில் புதிய இளம் வீரர்களுக்கு இந்த முறை அதிகம் வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

அத்துடன், இன்றைய போட்டியில் நிறைய புது முகங்கள் கலந்து கொள்கின்றனர். அதன்படி, வாஷிங்டன் சுந்தர், இந்திய அணியில் மீண்டும் திரும்பி உள்ளார்.

மிக முக்கியமாக, இன்று நடைபெற்று வரும் இந்த ஒரு நாள் போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா, கேப்டனாக தலைமை ஏற்று உள்ளார். ரோகித் சர்மா கேப்டனாக பொருப்பேற்கும் முதல் ஒரு நாள் போட்டி இது என்பதால், அதிகம் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

அதே நேரத்தில், இதுவரை கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த விராத் கோலி, தற்போத கேப்டன் பொறுப்பு இல்லாமல் விளையாடும் முதல் ஒரு நாள் போட்டி இது என்பதாலும், இந்த போட்டியானது, அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இந்தியா இன்று விளையாடும் இந்த போட்டியானது, 1000 வது ஒரு நாள் போட்டி என்பதால், தனி கவனம் பெற்று உள்ளது.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்தார் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்திய கிரிக்கெட் அணியின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை” என்று, குறிப்பிட்டார். 

“நாங்கள் சிறந்த அணி என்றும், அணியில் உள்ள அனைவரும் சிறந்த வீரர்கள்” என்றும், பெருமையோடு கூறினார். 

மேலும், “அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்? என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆனால், அது குறித்து இன்னும் முடிவு செய்ய நேரம் இருக்கிறது. இப்போதைக்கு எனது கவனம் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் மீதே முழுமையாக உள்ளது” என்றும், தெரிவித்தார்.

அப்போது, “டாப் வரிசையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா?” என்று, அங்கிருந்த ஒரு ரிப்போர்ட்டர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, சற்று கிண்டலாக கலாய்க்கும் விதமாக பதில் அளித்த கேப்டன் ரோகித் சர்மா, “உங்களுக்கு நானும், ஷிகர் தவானும் வெளியில் இருக்க வேண்டும்?! இஷான் கிஷனும், ருதுராஜ் கெய்க்வாட்டும் தொடக்க வரிசையில் விளையாட வேண்டும் அப்படி தானே?” என்று, சொல்லி சிரித்தார்.

இதனையடுத்து, கேப்டன் ரோகித் சர்மாவின் இந்த பேட்டி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா, முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. 

இதனிடையே, இசை தென்றல் லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி,  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து, இந்திய அணி வீரர்கள் களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.