“அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார்?” என்கிற போட்டி, அக்கட்சிகுள் அதிகரித்த நிலையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் யுத்தம் நடத்தி வருவது, அக்கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, அதிமுகவில் பல விசயங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்து முடிந்தும், இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

அதாவது, ஜெயலலிதா இருந்த வரை, அவர் தான் அதிமுக வின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வந்தார். ஆனால், அவர் மறைந்த உடன் அந்த பதவியை பொதுக் குழு கூட்டி சசிகலாவுக்கு தாரை வார்த்தனர். அவரும் அந்த பதவியை ஏற்றுக் கொண்ட நிலையில், பின்னர் அவர் கைது செய்யப்பட்டு, அக்கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் என இரட்டை தலைமையின் கீழ் செயல்பட்டு வருகிறது. எனினும், இவர்கள் இருவருக்கும் இடையே அதிகார போட்டி இன்றளவும் திரை மறைவில் நிலவி வருவது, அகட்சியினர் பலருக்கும் தெரிந்த உண்மையாகவே இருக்கிறத. 

அதே நேரத்தில், அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தல்களில் தொடர் தோல்வி அடைந்த பிறகு, “அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும்” என்ற முழக்கங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இதனால், “அதிமுக பொதுச் செயலாளராக யாரை தேர்வு செய்வது?” என்ற விவாதமும் அக்கட்சிகளும் திரைமறைவில் எழுந்தது. 

அந்த நேரத்தில் தான், “அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” என்று, தேனி மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், அக்கட்சிக்குள் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 

இந்த சூழ்நிலையில் தான், “வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறுவதாக” அக்கட்சியினர் அறிவித்த நிலையில், அதிமுக பொதுக் குழு கூட்டம் நடக்கும் முன்பாக, அது குறிதது நேற்று முன் தினம் ஆலோசனை நடத்த மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக வின் அவை தலைவரை தேர்வு செய்யவது, பொதுக் குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள், குடியரசுத் தலைவர் தேர்தல் ஆகியவை குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது. 

முக்கியமாக, அன்றைய கூட்டத்தில் பேசப்படும் முக்கிய தகவல்கள் வெளியே கசியாமல் இருக்க மாவட்டச் செயலாளர்கள் செல்போன் கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது.  இப்படியான நிலையில் தான், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் மைத்ரேயன் வருகை தந்தார். அப்போது, அவரிடம் அங்கிருந்தவர்கள் “செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை” என்று கூறி உள்ளனர். இதனால், கடும் ஆவேசம் அடைந்த மைத்ரேயன், அந்த கூட்டத்தில் பங்கேற்காமலேயே வெளியே சென்று விட்டார். மைத்ரேயன் அந்த கூட்டத்தில் பங்கேற்காமலேயே வெளியேறிய நிகழ்வு, அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தான், அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. 

இது குறித்து சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது. 
இதில், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், நெல்லை மாவட்ட செயலாளர் கணேச ராஜா, தென்சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஆகியோர் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆர்பி.உதயகுமார்,  ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்திற்கு வந்தனர்.

இதனால், அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற ஓபிஎஸ் - எடப்பாடி இடையே தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், இரு தரப்பினரும் தனித்தனியாக கூடி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போட்டியை உறுதி செய்யும் விதமாக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர்.

அதன்படி, ஓபிஎஸ் ஆதரவு ஆட்கள் அதிமுகவில் மிக முக்கிய ஆதரவாளர்களை இழுக்கும் விதமாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

அதே போல், திருவள்ளூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள், இரவோடு இரவாக போஸ்டர்கள் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.