இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது ரூ. 2.3 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

budget 2022

2022-23-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் உரையுடன் கடந்த 31-ம் தேதி தொடங்கியது. அப்போது, பல்வேறு துறைகளில் மத்திய அரசு புரிந்த சாதனைகளை அவர் பட்டியலிட்டு பாராட்டினார். அவரைத் தொடர்ந்து, மக்களவை, மாநிலங்களவையில் மத்திய பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு, நெடுஞ்சாலை திட்டம், 400 வந்தே பாரத் ரெயில் போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த பட்ஜெட் உரையில்,வருமான வரி வரம்பு உயர்வு,வீட்டு லோன் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாரதிய  ஜனதா கட்சியின் தொண்டர்கள் மத்தியில் இன்று  உரையாற்றிய பிரதமர் மோடி  கூறியதாவது:
மத்திய பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்களை கருத்தில் கொண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது. அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதி அல்லது மாவட்டம் ஏழ்மையில் இருப்பது சரியானது அல்ல; பா.ஜ.க. இளைஞர்களின் கனவுகளை அறிந்த கட்சி, அது இந்த பட்ஜெட்டில் பிரதிபலித்துள்ளது.

மேலும் தற்சார்பு என்ற அடித்தளத்தில் வருங்கால இந்தியா மிளிர வேண்டும். இந்த பட்ஜெட் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட். கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.ஏழு-எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  ரூ. 1 லட்சத்து 10,000 கோடியாக இருந்தது. ஆனால் இன்று அது சுமார் ரூ.2 லட்சத்து 30,000 கோடியாக உள்ளது. 

அதனைத்தொடர்ந்து பேசிய அவர் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கூட 200 பில்லியன் டாலரில் இருந்து 630 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. . இவை அனைத்திற்கும் எங்கள் அரசின்  பயனுள்ள கொள்கைகளே காரணம். 2013-14-ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 2 லட்சத்து 50,000 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று ஏற்றுமதி 4 லட்சத்து 70,000 கோடியாக உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் 275 பில்லியன் அந்நியச் செலாவணி இருப்பு இருந்தது, இன்று அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 630 பில்லியன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த கொரோனா  காலங்களில் கூட, இந்தியா அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையால் உலகின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. கடந்த 7 ஆண்டுகளில் விளையாட்டுக்கான பட்ஜெட் 3 மடங்கு உயர்ந்துள்ளது.விவசாயிகள் குடும்பத்து இளைஞர்களே விளையாட்டில் தேசத்தையே பெருமைப்படுத்துகிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.