தமிழகத்தில் கொரோனா பரவலின் 2 வது அலை உருவாகி உள்ள நிலையில், என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதனை தற்போது பார்க்கலாம்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது, படிப்படியாக அதிகரித்து வருகிறது. 
தமிழகத்தில் மீண்டும் முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுவிடுமா? என்று பயப்படும் அளவுக்குப் பீதியை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் தற்போது உருவாகி உள்ளன.

இதன் காரணமாக, “தமிழகத்தில் கொரோனா பரவலின் 2 வது அலை உருவாகியுள்ளது என்றும், பொது மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றும், தமிழக சுகாதாரத் துறை வலியுறுத்தி உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

- தனிப்பட்ட சுகாதாரத்தைக் கண்டிப்பாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.
- 20 விநாடிகளாவது குறைந்த பட்சம் சோப்புடன் கைகளைத் தவறாமல் கழுவ வேண்டும்.
- வெளியில் செல்லும்போது, பாக்டீரியா எதிர்ப்பு ஹாண்ட் சானிடைசரை எடுத்துச் சென்று கைகளில் தடவிக்கொள்ள வேண்டும். 
- உங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் போது எப்போதும் முகக்கவசங்களை அணிய வேண்டும். 
- இருமல் அல்லது தும்மும்போது எப்போதும் உங்கள் வாயை ஒரு டிஸ்யூ அல்லது கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். 

- கைக்குட்டை இல்லாத சமயங்களில் கைகளால் வாயை மூடிக்கொண்டு இருமவோ அல்லது தும்மவோ செய்யலாம்.
- தேவையில்லாமல் மற்றவரைத் தொட்டுப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
- முடிந்த வரை வீட்டில் சமைக்கும் பொருட்களையே உணவாக உண்ண வேண்டும்.
- வெளியே இருக்கும்போது, இருமல் அல்லது தும்மல் ஏற்பட்டால் அப்போது கட்டாயம் உங்கள் முகக்கவசத்தை கழற்றக் கூடாது.
- பயன்படுத்தப்பட்ட டிஸ்யூவை மூடிய குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும்.

- பொது இடத்தில் மற்றவர்களுடன் எப்போதும் 6 அடி தூரத்தைப் பராமரிக்கவும்.
- உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருக்க வேண்டும். 
- காய்ச்சல் இருந்தால், அரசு வழங்கிய வழிகாட்டுதல்களின் படி அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலை கடைப்பிடிக்க வேண்டும்.

செய்யக்கூடாதவை:

- வெளியில் செல்லும் போது முகத்தை, குறிப்பாகக் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- நெரிசலான இடங்களில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
- பொது இடத்தில் எச்சில் துப்பக் கூடாது.
- வேலைக்குச் செல்லும் வயதான ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அடிப்படை மருத்துவ நிலைமைகளைக் கொண்ட ஊழியர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறக்கூடாது.

ஆகிய விதிமுறை ஓரளவு பின்பற்றினாலே குறைந்தபட்சமாக நாம் அனைவரும் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இதனிடையே, கொரோனாவின் முதல் அலை பாதிப்பு அடங்கிய நிலையில், தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் 2 ஆம் அலை பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதனால், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 43,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.