“அரசுப் பள்ளிகளில் 9 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG - UKG வகுப்புகளை எடுத்த ஆசிரியர்கள் அனைவரும், மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்றப்படுவார்கள்” என்று, தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலன அரசுப் பள்ளிகளில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் #LKG #UKG வகுப்புகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, அரசுப் பள்ளிகளில்  #LKG #UKG வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையும் தொடங்கி நடைபெற்றது.

அந்த வகையில், சுமார் 2 ஆயிரத்து 381 பள்ளிகளில் தொடங்கப்பட்ட LKG, UKG வகுப்புகளுக்காக ஏராளமான தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்பட்டு, அங்கு பணியமர்த்தப்பட்டனர். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த செயலுக்கு, பெற்றோர் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

அந்த வகையில், கடந்த 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று #LKG, #UKG வகுப்புகள் முறைப்படி, குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

இந்த புதிய திட்டமானது, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பெற்றோர் மத்தியில் வெகுவான பாராட்டையும், வரவேற்பைப் பெற்றது. 
அத்துடன், இந்த அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை, காலணி உள்ளிட்டவைகளும் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இதுவும், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் தான், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் தாக்க தொடங்கியதன் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக #LKG #UKG வகுப்புகள் நடைபெறாமல் இருந்தன. 

இப்படியான சூழலில் தான், தமிழக அரசுப் பள்ளிகளில் அந்த இரு வகுப்புகளை மூட பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில், “இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கே அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு இருப்பதாகவும்” கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்பட்ட நிலையில், அதனை தற்போது இன்னும் முறைப்படுத்தி, மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், அதன்படியே தற்போது மீண்டும் சமூகநலத் துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் புதிதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

பள்ளிக் கல்வித் துறையின் இந்த  நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் இனி வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை அப்படியே வெகுவாக குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக, மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி அதிக கட்டணங்களைச் செலுத்தி குழந்தைகளை சேரக்கூடிய நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டு உள்ளதாகவும், விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையல் தான், இந்த விவகாரம் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் தற்போது அரசு சார்பில் புதிய விளக்கம் அளித்து உள்ளது.

அதில், 

- ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்புகளை கையாள அதிக ஆசிரியர்கள் தேவை என்பதால், தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர்.

- LKG, UKG வகுப்புகளை கையாள நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு மாற்றப்படுகின்றனர்.

- மழலையர் வகுப்பில் உள்ள குழந்தைகளை கையாள்வதில் சிக்கில், புரிதலின்மையே நீடித்தது என்றும், விளக்கம் கூறப்பட்டு உள்ளது.

- கடந்த 2013-14 க்கு பிறகு, ஆசிரியர்கள் புதிதாக நியமிக்காததால், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படாமல் இருந்தது.

- தொடக்க வகுப்புகளை கையாளும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 4,863 காலிப் பணியிடம் ஏற்பட்டது.

- 9 ஆயிரம் ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளை எடுத்த ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளுக்கு மாற்றப்படுகிறார்கள்.

- குறிப்பாக, அங்கன்வாடிகளில் தற்காலிகமாக LKG, UKG வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

- ஒன்றாம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்றும், தமிழக அரசு பார்பில் தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்து உள்ளது.