கொரோனா தொற்று குறையாத 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அது என்னென்ன தளர்வுகள் என்பது பற்றி தற்போது பார்க்கலாம். 

கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 14 ஆம் தேதி காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கொரோனா தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் 

நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 14 ஆம் தேதி முதல் வரும் 21 ஆம் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

எனினும், கொரோனா நோய்த் தொற்று அதிகம் உள்ளதாகக் கூறப்படும் 11 மாவட்டங்களில் அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில், கூடுதலாக குறிப்பிட்ட சில அத்தியாவசியச் செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அதன் படி,

- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ பதிவுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- மின் பணியாளர் பிளம்பர்கள் கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், இவர்கள் யாரும் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.

- மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

- வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர 3 பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர 2 பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. 

- வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

- கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

- மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வது, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.

- ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.