“தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்” என அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலையாக வேகம் எடுத்துக்கொண்டிருந்த சூழலுக்கு மத்தியில் தான், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அடுத்த சில நாட்களிலேயே ஏற்கனவே இருந்த ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் கடுமையாக்கினார். கடந்த மே 24 ஆம் தேதி முதல் தளர்வுகள் எதுவும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவைத் தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாகவே, இந்த முழு ஊரடங்கு உத்தரவானது, மேலும் 2 வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாள் தோறும் 35 ஆயிரத்திற்கு மேல் பதிவான தினசரி கொரோனா பாதிப்பானது, தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கிற்குப் பிறகு, படிப்படியாகக் குறைந்து 17 ஆயிரமாகக் குறைந்து உள்ளது. 

ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, உயிரிழப்பின் பாதிப்பு அதிக அளவில் இருக்கவே செய்கிறது.

இதனால், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது குறித்தும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், போலீஸ் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அதிகாரிகள் பரிந்துரை செய்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதன் படி, ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் தமிழக அரசு அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும், முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் நடத்திய இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, மாவட்ட ஆட்சியாளர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவுடனும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசிப்பார் என்றும் கூறப்பட்டு வந்தது.

அதன் படி, சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் தற்போது முடிவு பெற்று உள்ளது. இந்த கூட்டத்திலும், ஊரடங்கு மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க மருத்துவ உயர் அதிகாரிகள் முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் தற்போது 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்த மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படுமா? மற்ற மாவட்டங்களில் இன்னும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுமா? என்பது குறித்தும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. 

எனினும், “தமிழகத்தில் இன்னும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் முக்கிய அதிகாரிகள் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதால், தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும்” என்றே கூறப்படுகிறது.

குறிப்பாக, அடுத்த வார ஊரடங்கில், புதிய தளர்வுகள் என்னென்ன என்பது குறித்த அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வெளியிடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.