தமிழகத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரடங்கு வரும் 14 ஆம் தேதி காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், கொரோனா தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 14 ஆம் தேதி முதல் வரும் 21 ஆம் தேதி காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிடுகிறேன்” என்று, குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்த ஊரடங்கு காலத்தில், “கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்” என்றும், அறிவுறுத்தி உள்ளார்.

“கடைகளில் பணி புரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதைச் சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது” என்றும், முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

“கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் என்றும், இந்த ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அத்துடன், “கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கூடுதலாகக் குறிப்பிட்ட அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது” என்றும், அவர் கூறியுள்ளார்.

அதன் படி, “தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ பதிவுடன் அனுமதிக்கப்படும்” என்றும், அவர் தெரிவித்து உள்ளார்.

“மின் பணியாளர் பிளம்பர்கள் கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுய தொழில் செய்பவர்கள் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 9 மாலை 5 மணி வரை இ பதிவுடன் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதே நேரத்தில் இவர்கள் யாரும் கடைகள் திறக்க அனுமதி இல்லை” என்றும் கூறப்பட்டு உள்ளது.

“மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்” என்றும், கூறப்பட்டு உள்ளது. 

“வாடகை வாகனங்கள், டாக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்” என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, “கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி” அளிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக, “பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு அனுமதி” அளித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.