நாகர்கோவில் அருகே கள்ளக் காதலனுடன் உல்லாசமாக வாழ நினைத்த மனைவி, கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயன்ற வழக்கில் அதிரடி திருப்பமாகக் கள்ளக் காதலன் யாசின் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அடுத்துள்ள கேசவ திருப்பபுரத்தைச் சேர்ந்த கணேஷ் - காயத்ரி தம்பதியினருக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவர் கணேஷ், அதே பகுதியில் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வருகிறார். 

இதனிடையே, மதுரையைப் பூர்விகமாகக் கொண்ட கணேஷ் மனைவி காயத்ரி, திருமணத்திற்கு முன்பாக மதுரையைச் சேர்ந்த யாசின் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் காதல் ஜோடியாக மதுரை சுற்றி வலம் வந்த போது, இந்த காதல் விசயம் காயத்ரியின் பெற்றோருக்குத் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த காயத்ரியின் பெற்றோர், மகளின் காதலைத் திட்டமிட்டே பிரித்து, கணேஷிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

காயத்ரியின் திருமணத்திற்குப் பிறகும், தன் காதலன் யாசினி உடன் பழைய படியே அவர்களது காதல் கதை, கள்ளக் காதலாக மாறி தொடர்ந்துள்ளது.

இதனால், கணவர் கணேஷ் வெளியூர் செல்லும் போதெல்லாம் கள்ளக் காதலன் யாசின் உடன் காயத்திரி உல்லாசமாக ஒரு தனி வாழ்க்கையே வாழ்ந்து வந்துள்ளார். இப்படி, காயத்ரிக்கு கள்ளக் காதலும், அந்த கள்ளக் காதல் வாழ்க்கையும் மிகவும் பிடித்துப் போகவே, யாசினை விட்டு கொஞ்சம் நேரம் கூட பிரிய முடியாத அளவுக்கு அவர்களது கள்ளக் காதல் இன்னும் ஆழமாகவும், கண்மூடித்தனமாகவும் வளர்ந்துள்ளது. 

அதேபோல், கள்ளக் காதலன் யாசினும், காயத்ரியை விட்டுப் பிரிய முடியாமல் ஏங்கித் தவித்து, நாகர்கோவிலுக்கு வந்து அங்குள்ள கேசவ திருப்பபுரத்தில் ப்ளே ஸ்கூல் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டார். திட்டமிட்ட படி ப்ளே ஸ்கூல் தொடங்க, போதிய பணம் இல்லாததால் காதலருக்கு உதவி செய்ய விரும்பிய காயத்ரி, கணவர் பெயரில் உள்ள வீட்டுப் பத்திரத்தை எடுத்து, “எனது சொந்த அண்ணனுக்கு அவசர தேவைக்காக உதவுவதாக” பொய் சொல்லி, கணவனை ஏமாற்றி காதலன் யாசினுக்கு அந்த பத்திரத்தை அடமானம் வைத்து பணம் கொடுத்துள்ளார். 

பத்திரம் அடமானம் வைத்து, அதன் மூலம் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பணத்தில், ப்ளே ஸ்கூல் தொடங்கிய அந்த கள்ளக் காதல் ஜோடி, அதே ப்ளே ஸ்கூலில் ஆசிரியையாகவும் காயத்திரியை, கள்ளக் காதலன் யாசின் அமர்த்தி அழகு பார்த்து உள்ளான். அத்துடன், கள்ளக் காதலர்கள் இருவரும், ப்ளே ஸ்கூலை சரிவரக் கவனிக்காமல் இருந்த விட்டு, தங்களது உல்லாச வாழ்க்கையிலேயே அவர்கள் இருவரும் குறியாக இருந்துள்ளனர். இதனால், ப்ளே ஸ்கூலில் லாபம் கிடைக்காமல், நஷ்டத்தைச் சந்தித்து உள்ளது. இதனால், வீட்டுப் பத்திரத்தை மீட்க முடியாமல், மூழ்கியதாகவும் தெரிகிறது. 

அதன் தொடர்ச்சியாக, கணவர் கணேஷ் வீட்டுப் பாத்திரம் குறித்து தன்னுடைய மனைவியிடம் கேட்டுள்ளார். அப்போது, ஏதேதோ சொல்லி காயத்ரி சமாளித்து உள்ளார். அத்துடன், வீட்டுப் பத்திரம் குறித்து கணவருக்கு சந்தேகம் வந்து விட்டது என்றும், ஆனால் இது குறித்து தன் கணவருக்கு எதுவும் தெரியக்கூடாது என்று நினைத்த மனைவி காயத்ரி, தனது கள்ளக் காதலன் யாசினும் உடன் சேர்ந்து கணவனை கொலை செய்யத் திட்டமிட்டார். திட்டமிட்டபடி, கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமாரை என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறி, கணவர் கணேஷை கொலை செய்யக் கூறி உள்ளார்.

குறிப்பாக, “என் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார் என்று நான் நிரூபிக்க வேண்டும் என்றால், என் கணவரின் ஆண் உறுப்பைச் சிதைக்க வேண்டும்” என்றும், காயத்திரி கூறி அந்த கூலிப்படையை ஏவி விட்டிருக்கிறார். அதன்படி, இரவு நேரத்தில் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் வீட்டிற்குள் வந்து கொலை செய்தவர்க்கு வசதியாக வீட்டின் பின்புற கதவு முதல் அனைத்து கதவுகளையும், அன்று பூட்டாமல் வெறுமனே சாத்தி வைத்து உள்ளார். 

இப்படித் திட்டமிட்டபடி, இரவு நேரத்தில் வீடு புகுந்த அந்த கூலிப்படையைச் சேர்ந்தவர்கள், கணேஷின் ஆண் உறுப்பைச் சிதைத்து, கொடூரமாக அவரை கொலை செய்யும் விதமாகத் தாக்கி உள்ளனர். ஆனால், அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதனால், அந்த கூலிபடையச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

மேலும், படுகாயம் அடைந்த கணேசை அவரது உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த கொலையாளிகள் வீட்டிற்குள் எப்படி வந்தனர் என்று விசாரணையில், மனைவி காயத்ரி மேல் போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து, அவரிடம் போலீசார் தனிப்பட்ட முறையில் விசாரித்தபோது, அவரே எல்லா உண்மைகளையும் ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து மனைவி காயத்திரி, கூலிப்படையைச் சேர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் யாசினை தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருந்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் மூளையாகச் செயல்பட்ட யாசின் கடந்த ஒரு மாதமாகத் தலைமறைவாக இருந்து வந்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீசார், யாசின் மதுரையில் பதுங்கி இருப்பதைத் தெரிந்துகொண்டு, அங்கு சென்று அதிரடியாக அவரை கைது செய்தனர். 

இதனையடுத்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு யாசினை அழைத்து வந்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்திவிட்டு, நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.