திருமணம் ஆன சிறுமி ஒருவர், பள்ளி தோழனுடன் கள்ளக் காதலில் இருந்த காரணத்தால், தனது கணவனை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கத்தாலம்பட்டி கிராமத்தை 30 வயதான கருப்பசாமி, சென்னை எண்ணூர் பகுதியில் தங்கியிருந்து, மணலி ஆண்டார் குப்பம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த உணவகத்தில் ஜோதி என்ற பெண்ணும், அவருடைய 16 வயது மகளும் ஒன்றாக சேர்ந்து பணி புரிந்து வந்தனர். 

இப்படியான சூழலில், 30 வயதான கருப்பசாமியின் செயல்பாடுகள் பிடித்துப் போகவே, அங்கு வேலை செய்து வந்த ஜோதி, தனது 16 வயது மகளான சிறுமியை, இந்த கருப்பசாமிக்கு கடந்த ஆண்டு கொரோனா காலகட்டத்தில் திருமணம் செய்து வைத்து உள்ளார்.

கருப்பசாமி தூத்துக்குடி என்பதால், மாப்பிள்ளையின் ஊருக்கே சென்று, தனது மகளைத் திருமணம் செய்து வைத்துவிட்டு, ஜோதி சென்னை திரும்பி உள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இருவரும் தூத்துக்குடி கருப்பசாமி வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.

திருமணமான ஒரு மாதத்திலேயே, கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மனைவியான அந்த 16 வயது சிறுமி? சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் இருக்கும் தன்னுடைய தாயார் ஜோதி வீட்டிற்கு வந்து உள்ளார்.

இந்த நிலையில், கணவன் கருப்பசாமி, தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக, பெண்ணின் வீட்டிற்கு வந்து உள்ளார்.

அப்போது, கணவன் கருப்பசாமியும், அவர் மனைவியான அந்த 16 வயது சிறுமியும் வீட்டின் வெளியே பேசிக்கொண்டு இருந்து உள்ளனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்ற சிறுவன், கருப்பசாமியின் பின் தலையில் திடீரென்று கத்தியால் குத்தி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கருப்புசாமியை, அங்கிருந்தவர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது, அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் இருந்த படியே கருப்புசாமி அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த எண்ணூர் போலீசார், வசந்தகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். 

அப்போது, கருப்பசாமியின் மனைவியான சிறுமியுடன் இந்த வசந்தகுமாரும், தண்டையார்பேட்டையில் உள்ள பள்ளியில் ஒன்றாக படித்து உள்ளனர் என்றும், அப்படி படிக்கும் போதே இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர் என்பதும் தெரிய வந்தது.

குறிப்பாக, பள்ளியில் படிக்கும் காதலித்து வந்த அவர்கள் இருவரும் ஒரு 3 மாத காலமாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும், கத்தியால் தாக்கிய வசந்தகுமார் இந்த சிறுமியின், முன்னாள் காதலன் என்பதும், இவர்கள் இருவருக்கும் தற்போது வரை கள்ளத் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, கத்தியால் தாக்கிய வசந்தகுமாரை கைது செய்து, போலீசார் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும், கள்ளக் காதலில் இருந்து வந்த சிறுமிக்கு 16 வயது என்பதால், அவரை அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.