தமிழகத்தில் இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டுக்கு, மாதம் ரூ.3000 வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.  
சட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்துவிட்டு முழுநேர வழக்கறிஞர்கள் ஆக வேண்டும் என்றால் குறைந்தது 3 ஆண்டுகாலம் தேவைப்படுகிறது. இந்த காலகட்டத்தில் போதிய வருமானம் இன்றி இளம் வழக்கறிஞர்கள் வேறுத் துறையைத் தேர்வு செய்கின்றனர். இந்த சூழலில், கடந்த ஜூலை 2ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 'சட்டப்படிப்பினை முடித்து கல்லூரியிலிருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள், பார் கவுன்சிலில் நிரந்தரப் பதிவுச் சான்றிதழ் பெறுவதற்கு முதலில் தேசிய அளவிலான வழக்கறிஞர்கள் குழுமத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின்னர்  இளநிலை வழக்கறிஞர்களாக, மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் 2 அல்லது 3 ஆண்டுகாலம் பயிற்சி பெற வேண்டும். எனவே, சட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், சட்டப்படிப்பினை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாகப் பணியாற்றுவதற்குக் குறைந்தபட்சம் 3 அல்லது 4 ஆண்டுகள் தேவைப்படுகிறது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வரும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இக்காலகட்டத்தில் பல வழக்கறிஞர்கள் மிகவும் வறுமையான நிலையில் உள்ளதோடு, ஒரு சிலர் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள இயலாமல் வேறு மாற்றுத்தொழிலுக்குச் சென்று விடும் நிலையும் ஏற்படுகிறது. எனவே, இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என்று தெரிவித்திருந்தார்.

அரசின் இந்த உதவித் தொகையைப் பெறுவதற்குத் தகுதியும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் சட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை, தான் பயிற்சி பெறும் மூத்த வழக்கறிஞரிடம் இருந்து தொடர்ந்து தொழில் புரிவதற்கான அத்தாட்சி சான்றிதழ் பெற்றுச் சமர்ப்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். உதவித் தொகையைப் பெறத் தகுதியுள்ள ஒரு சில இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகையை வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில்,  சட்டத்துறை அமைச்சர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  
இந்த நிதியுதவியானது, அரசு சட்டக் கல்லூரிகளில் படித்த 30 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.