தமிழகத்தில் 2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரவிருப்பதையடுத்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளுக்கு தயாராகி வருகின்றது. இந்தச் சூழலில், வரும் ஜனவரி 1-ந் தேதியை வாக்காளராக தகுதியடையும் நாளாக (18 வயது முடிப்பவர்கள்) கணக்கிட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை மேற்கொள்ள, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பணியை மேற்கொள்வதற்காக, அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் வாக்காளர்கள், தங்கள் பெயர் விவரங்களை சரிபார்க்க வேண்டும். பெயர் சேர்ப்பது, ஆட்சேபனை தெரிவிப்பது போன்றவற்றுக்கு நவம்பர் 16-ந் தேதியில் இருந்து டிசம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ந் தேதி இறுதி செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வரும் ஜனவரி 20-ந் தேதி வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இறங்கியுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பணிகளை மேற்கொள்வது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) அவர் கடந்த செப்டம்பர் 3-ந் தேதி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த நிலையில் நேற்று சத்யபிரத சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் குறித்து நவம்பர் 3-ந் தேதி, தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னராக வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பது, இறந்தவர் பெயர் நீக்காமல் இருப்பது உள்பட சில குற்றச்சாட்டுகளை தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூறி வந்தன. அவையாவும் நவம்பர் 3-ந் தேதி நடக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பாக, அங்கீகாரம் பெற்ற, அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம், நவ., 3ம் தேதி நடக்க உள்ளது. இப்பணியை சிறப்பாக மேற்கொள்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் உடனான ஆலோசனை கூட்டம், நவ., 3ல் நடக்கும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்து உள்ளார்.கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது, அரசியல் கட்சியினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி விளக்குவார். மேலும், அவர்கள் கூறும் ஆலோசனைகளை கேட்டு, அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது.