“இஸ்லாமியர்களின் ஆதரவு குஷ்புவிற்கு இருக்கா? இல்லையா?”

“இஸ்லாமியர்களின் ஆதரவு குஷ்புவிற்கு இருக்கா? இல்லையா?” - Daily news

“ஆயிரம் விளக்கு தொகுதியில் இஸ்லாமியர்களின் ஆதரவு குஷ்புவிற்கு இருக்கா? இல்லையா?” என்று விமர்சிக்கப்பட்ட நிலையில், இஸ்லாமியர்களின் ஆதரவு நடிகை குஷ்புவிற்கு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே கருத்துக்கணிப்பு என்ற பெயரில் சோசியல் மீடியாக்களில் கருத்து திணிப்புகளைப் பரப்பும் வேலைகள் நடந்து வருகின்றன. “இந்த தொகுதியில் வெல்லப்போவது யார்?”, “இந்த சமூகத்தினரின் ஓட்டு யாருக்கு?” என்கிற கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் வரும் கருத்துக்கணிப்புகளை எளிதில் நம்பக்கூடிய சூழ்நிலையில் தற்போது மக்கள் இல்லை. அதற்கு காரணம், “கள நிலவரங்களையும், நமக்கு நல்லது செய்பவர் யார்?” என்பதையும் மக்கள் தற்போது நன்கு உணர்ந்துகொண்டு உள்ளனர்.

அப்படி சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் களமிறங்கியுள்ள நடிகை குஷ்பு மீது, பொய்யான சில பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிகளில் நடிகை குஷ்புவிற்கு பெண்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அவர் பாஜக சார்பில் போட்டியிடுவதால், இஸ்லாமியர்களின் வாக்குகள் அவருக்குக் கிடைக்காது என்ற வதந்தியும் பரப்பப்பட்டு வந்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், சில கள நிலவரங்களின் படி, இஸ்லாமிய சகோதரிகள் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்துக் கொண்டாடி வருகிறார்கள் என்றும், மற்றொரு பக்கம் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அத்துடன், “இஸ்லாமிய பெண்களின் தேவையை அறிந்து, வீட்டில் இருந்த படியே இஸ்லாமியப் பெண்கள் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்” என்று, தன் தொகுதி மக்களுக்காக குஷ்பு பிரத்தியேக வாக்குறுதியைக் கொடுத்து வருகிறார். இந்த ஒரு வாக்குறுதிக்காகவே ஏராளமான இஸ்லாமிய பெண்கள் குஷ்புவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், தங்கள் வீட்டு வாசல் வரை வந்து வாக்கு சேகரிக்கும் நடிகை குஷ்புவை, வீட்டிற்குள் அழைத்து உபசரிப்பதோடு மட்டுமல்லாது, “தங்களது முழு ஆதரவும் உள்ளது” என பலர் வாழ்த்தி வருவதையும் சோசியல் மீடியாக்களில் காணமுடிகிறது. 

நேற்றைய தினம் கூட ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரத்திற்குச் சென்ற நடிகை குஷ்புவை, ஆரத்தழுவி இஸ்லாமிய சகோதரிகள் சிலர், சிறப்பான வரவேற்பு கொடுத்து அவரை அசத்தினர். அப்பகுதியைச் சேர்ந்த சில இஸ்லாமிய பெண்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் குஸ்புக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான படங்களையும், சோசியல் மீடியாக்களில் பரவியது. 

ஆனால், இதனைத் திசை திருப்பும் விதமாக இஸ்லாமியர்களின் ஆதரவு குஷ்புவிற்கு கிடையாது என்கிற பொய்யான வதந்திகள் சமீபத்தில் பரப்பப்பட்டு வருகிறது. 

முக்கியமாக, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை யாரும் மறந்திருக்க முடியாது. திமுக அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், அதிமுக 5 இடங்களில் கூட வெற்றி பெறாது என்றும் கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால், அவைகள் எல்லாம் பொய் என்று கூறும் வகையில் அப்போதைய தேர்தல் முடிவுகள் அமைந்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அப்போது அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்ததது. “இதுவே, தற்போது நடிகை குஷ்பு மீது பரப்பப்படும் கருத்து திணிப்புகளுக்கான சரியான பதிலடி” என்றும், குஷ்பு தரப்பில் இருந்து பதில் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment