2020 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறைகள் அதிகரித்ததாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்தியாவில் பரவியது முதல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த 2020 ஆம் ஆண்டின் இறுதி நாளில் நாம் இருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், 2020 ஆம் ஆண்டில் குடும்ப வன்முறைகள் அதிகரித்ததாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்திருக்கின்றன.

அதாவது, இந்த கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, மக்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கிப்போனார்கள். இதனால், கடந்த மார்ச் மாதம் இறுதி வாரம் முதல் தற்போது வரை நாடு முழுவதும் உள்ள பெண்கள் மீதான குடும்ப வன்முறைகள் முன்பைவிட அதிகரித்து காணப்பட்டு வருகின்றன. 

இந்த  குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்கள், மாதம் மாதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில், அதிக பட்சமாகக் கடந்த ஜூலை மாதத்தில் 660 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இந்த 2020 ஆம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இது போன்ற புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இதில், பெண்கள் பலரும், “பொருளாதார பாதுகாப்பின்மை, நிதி உறுதியற்ற தன்மை மற்றும் மற்றவர்களிடையே தனிமைப்படுத்தல் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக” தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாகக் கருத்து கூறிய பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, “வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது என்றும், அது கடினமான விசயம் என்றும், குறிப்பிட்டார். இருப்பினும், அதையும் தாண்டி பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் தற்போது அதிகரித்துள்ளது வேதனை அளிப்பதாக உள்ளதாக” அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், “இந்த புகார் எண்ணிக்கையானது, கடந்த காலங்களில் வன்முறை புகார்கள் அதிகரித்துக் காணப்பட்டுள்ளன” என்றும், அவர் வேதனைத் தெரிவித்துள்ளார். 

அது போல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புதிய புள்ளி விபரங்களைத் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது. அதன் படி, இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 87 பாலியல் பலாத்கார குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது.

முக்கியமாக, ஆண்டுக்கு மிகச் சரியாக 4,05,861 பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பதிவாகி இருப்பதாகவும் தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் கூறியுள்ளது. இந்த குற்றங்கள், கடந்த 2018 ஆம் ஆண்டை விட, 2019 ஆம் ஆண்டில் 7 சதவீதத்திற்கும் மேலானது என்றும், தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் அதிர்ச்சி ஊட்டும் தகவலை தெரிவித்து இருக்கிறது.

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டில் குழந்தைகள் மீதான மொத்த குற்றங்களானது சுமார் 1.48 லட்சம் அளவுக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளன என்றும், இவற்றில் 46.6 சதவீதம் கடத்தல் வழக்குகள் மற்றும் 35.3 சதவீத வழக்குகள் பாலியல் பலாத்கார குற்ற வழக்குகள் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், கடந்த 2018 ஆண்டை விட கடந்த 2019 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 4.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துக் காணப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. 

அத்துடன், பெண்கள் மீதான தாக்குதல் சம்பவமானது 21.8 சதவீதமாகவும், பெண்கள் கடத்தல் தொடர்பான வழக்குகள் 17.9 சதவீதமாகவும், என்.சி.ஆர்.பி. தரவு, தனது புள்ளி விபரங்களில் சுட்டிக்காட்டி உள்ளது.

பெண்கள் தொடர்பான குற்ற விகிதம் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் 62.4 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டு உள்ளது. இது எண்ணிக்கையானது கடந்த 2018 ஆம் ஆண்டின் 58.8 சதவீதமாக மட்டுமே இருந்தது. அது, கடந்த ஆண்டு முன்பைவிட அதிகரித்து இருக்கிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,78,236 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, கடந்த 2018 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 33,356 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இந்த குற்ற வழக்குகளானது, கடந்த 2017 ஆம் ஆண்டில் 32,559 

ஆக மட்டுமே பதிவாகி இருந்திருக்கிறது. தற்போது, கடந்த 2019 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 4,05,861 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்குகளில் பெரும்பாலும் கணவர் அல்லது அவரது உறவினர்களால் நிகழ்த்தப்பட்ட கொடுமை என்றும், இது புள்ளி விபரங்களில் பார்க்கையில் 30.9 சதவீதம் என்றும் கூறப்பட்டு உள்ளது.

அதே போல், இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு தினந்தோறும் 80 கொலைகள் 91 பாலியல் பலாத்கார குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகக் குற்ற விபரங்கள் பற்றிய புள்ளி விவரங்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்தது. 

மிக முக்கியமாக, தமிழ்நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கீழ், மாநில குற்ற 
ஆவணக் காப்பகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

“கடந்த 2018 ஆம் ஆண்டு சற்று அதிகரித்து 25 வழக்குகளும், 2019 ஆம் ஆண்டு மேலும் அதிகரித்து 35 வழக்குகளும் பதிவாகி” உள்ளன.

இதனால், தமிழ்நாட்டில் பள்ளிகளில் பாலியல் வன்முறையும், மாணவர்கள் மீதான துன்புறுத்தலும் அதிகரித்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, “தமிழகத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகள் எண்ணிக்கையும், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதோடு, தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறுவர்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை தொடர்பாகப் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையும்” தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

அதே போல், இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மட்டும் நாள் தோறும் 381 பேர் தற்கொலை செய்துகொண்டதாக, குற்ற ஆவணக் காப்பகம் அதிர்ச்சிகரமான புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.