தளபதி விஜய் நடிப்பில் கடந்த 11 ம் தேதி உலகெங்கிலும் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் வருகிறது. பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான வாரிசு திரைப்படம் 10 நாட்களை கடந்து பல திரையரங்குகளில் கொண்டாட்டங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் உலகெங்கும் வசூல் குவித்து வருகிறது வாரிசு திரைப்படம்.

அதன்படி வெளியான 7 நாட்களில் இப்படம் 210 கோடிக்கு மேல் வசூலித்து இருந்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இப்படத்தினை தயாரிக்க பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இப்படத்தை இயக்கினார். குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி உருவான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். மேலும் சரத்குமார், யோகிபாபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, கணேஷ் வெங்கட்ராமன், ஷியாம், சங்கீதா,ஸ்ரீகாந்த், சம்யுக்தா, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது. தமன் இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கிலும் ஒலித்து கொண்டிருக்கின்றது மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் தற்போது இணையத்தில் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து போய் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தளபதி விஜய் படக்குழுவினருடன் இணைந்து எளிமையாக கொண்டாடி உள்ளார். ஐதராபாத் நட்சத்திர விடுதியில் வாரிசு திரைப்படத்தின் சக்சஸ் பார்டி நடைபெற்றது. இதில் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு , இசையமைப்பாளர் தமன் , பாடலாசிரியரும் வாரிசு படத்தின் வசனகர்த்தாவான விவேக் மற்றும் நடிகர் ஷ்யாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாரிசு பட வெற்றியை கொண்டாடும் விதத்தில் சிறப்பு கேக் வெட்டப்பட்டு படக்குழுவினர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இது குறித்து படத்தின் இசையமைப்பாளர் தமன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சிறந்த தருணம் இது. நன்றி விஜய் அண்ணா.. என்னால் இந்த உயர்வில் இருந்து வெளியேற முடியவில்லை” என்று குறிப்பிட்டு இருந்தார்.