இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹீரோவாகவும் பான் இந்திய ஸ்டார் என்ற அந்தஸ்தையும் கொண்டிருப்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரபாஸ் அவர்களுக்கு பாகுபலி படத்திற்கு பின் பெரிதளவு எந்த படங்களும் கை கொடுக்கவில்லை. முழுமையான வெற்றிக்காக தற்போது பிரபாஸ் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி, கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய கவனத்தை பெற்ற இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ‘சலார்’ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் உலகளவில் வரும் செப்டம்பர் 28 ம் தேதி வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து பிரம்மாண்ட சைன்ஸ் பிக்சன் திரைப்படமான ‘புரோஜக்ட் கே’ படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் அமிதாப்பச்சன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனார்.

இதனிடையே பிரபாஸ் இராமயாணம் கதையை தழுவி நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க கீர்த்தி சனொன் சீதையாக நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து ராவணனாக சைஃப் அலிகான், லட்சுமணன் கதாபாத்திரத்தில் சன்னி சிங் மற்றும் அனுமான் கதாபாத்திரத்தில் தேவதத்தா நாகே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

T-SERIES FILMS மற்றும் RETROPHILES ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அபூர்வா மோட்டிவாளி சஹை மற்றும் ஆஷிஷ் மட்ரே இணைந்து படத்தொகுப்பு செய்துள்ளனர் மேலும் ஆதிபுரூஷ் படத்திற்கு அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் கடந்த ஜூன் 16 ம் தேதி ஆதிபுருஷ் திரைப்படம் உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. ஆரவார வரவேற்புடன் நாடு முழுவதும் ஆதிபுருஷ் திரைப்படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கலவையான விமர்சனத்தை பெற்றாலும் ஆதிபுருஷ் திரைப்படம் கடந்த இரண்டு நாட்கள் முடிவில் உலகளவில் ரூ 240 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஒருபுறம் வசூலில் தொடர் சாதனைகளை ஆதிபுருஷ் திரைப்படம் படைத்து வந்தாலும் படத்தின் திரைக்கதை மற்றும் VFX போன்ற சில விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் காட்டமாக எழுந்து வருகின்றது. மேலும் படத்தில் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் மனதை புண்படுத்தும் அளவு இருந்தது என்றும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களை கருத்துகளை கருத்தில் கொண்டு ஆதிபுருஷ் படக்குழு படத்தில் சில வசனங்களை மறு சீரமைக்க முன் வந்துள்ளது. இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “பார்வையாளர்களின் உணர்வுகள் மற்றும் நல்லிணக்கத்திற்கு அப்பால் எதுவும் இல்லை. பார்வையாளர்களின் கருத்தை மதித்து ஆதிபுருஷ் குழு, பட அனுபவத்தை ஒன்றிணைக்கும் வகையில் உரையாடல்களை மறுசீரமைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அந்த அறிவிப்பு ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.