“தினமும் 5 ஆண்களிடம் படுக்க சொல்லி டார்ச்சர் செய்வார்கள்” என்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு காரிலிருந்து தூக்கிவீசப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரைச் சேர்ந்த 27 வயதான அந்தோரா என்ற இளம் பெண், கடந்த பல ஆண்டுகளாகக் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

அப்போது, பெங்களூருவில் உள்ள தனது சித்தி மகள் சாந்தா மூலம், ஒருவர் அறிமுகமான நிலையில், வீட்டு வேலை என்று அந்தோராவிடம் கூறி, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துவந்துள்ளனர். ஆனால், இங்கு வந்ததும், இந்த வீட்டில் உள்ள போலீஸ், ஒரு பெண் உட்பட மொத்தம் 4 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடும் படி அடித்துத் துன்புறுத்தி உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததுடன், தன்னை பெங்களூருக்கு திருப்பி அனுப்புமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த அந்த கும்பல், இந்த பெண்ணை கடுமையாகத் தாக்கிவிட்டு, தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையிலேயே பகுதியில் உள்ள செங்கிப்பட்டி - சானூரபட்டி பகுதியில் காரில் வந்து நள்ளிரவு ஒரு மணி அளவில் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதில், படுகாயங்களுடன் விழுந்து கிடந்த அந்த பெண்ணை, அந்த பகுதியில் உள்ள மாதர் சங்கத்தினர் சேர்ந்து, அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த அவர்கள், அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இதில், அந்த பெண் அளித்த தகவலின்படி, பெண்ணை தாக்கி பாலியல் தொழிலில் ஈடுபடச் செய்தது தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, செந்தில்குமார் அவரது மனைவி ராஜம் உள்ளிட்ட 4 பேர் மீது வல்லம் மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அனைவரையும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

இந்த வழக்கில் கைதாகியுள்ள பிரபாகரன், சில ஆண்டுகளுக்கு முன்பு வல்லம் காவல்நிலையத்தில் பணிபுரிகையில் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டவர்.

இதனிடையே, காரிலிருந்து தூக்கிவீசப்பட்ட பெண் தற்போது உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “கடந்த 5 மாதங்களாக நான் ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தேன். ஆனால், கடந்த சில நாட்களாக செந்தில்குமாரின் மனைவி ராஜம் என்னை, பாலியல் தொழிலில் ஈடுபடும்படி அடித்துத் துன்புறுத்தினார்.

தொடர்ந்து என்னை அடித்துத் துன்புறுத்தியதால், நானும் வேறுவழியின்றி என் மனதை கல்லாக்கிக்கொண்டு பாலியல் தொழிலுக்கு உள்ளாக்கப்பட்டேன். ஈடுபட்டேன். தினமும் 5 ஆண்கள் என்ற வீதத்தில் என்னை கட்டாயப்படுத்தித் துன்புறுத்துவார்கள். இதனால், மனதளவிலும் உடல் அளவிலும் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன்.

இதனால், அந்த வீட்டிலிருந்து நான் தப்ப நினைத்தபோது, அந்த கும்பலிடம் மாட்டிக்கொண்டேன். அப்போது, அந்த கும்பல் என்னைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, காரிலிருந்து தூக்கிவீசிவிட்டு சென்றுவிட்டனர்” என்று அழுதபடியே வாக்குமூலம் அளித்துள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட அந்த 4 பேரிடம் விசாரணை நடத்தியதில், இந்த வழக்கில் 2 காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கும் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த கும்பல் பயன்படுத்திய 4 கார்கள், 3 இருசக்கர வாகனம், 4 செல்போன் மற்றும் ஒரு ரகசிய டைரியும் சிக்கி உள்ளது. இதனால், அந்த டைரியில் உள்ளவர்கள் தற்போது போலீசாரின் விசாரணை வலையத்தில் சிக்க உள்ளதாகவும் போலீசார் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்த கும்பலுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தற்போது மரண பீதியில் உரைந்துள்ளனர்.

குறிப்பாக, இதன் அடுத்தகட்ட விசாரணையில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதானால், இந்த வழக்கில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.