குடிபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவி கல்லால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த நகலூரை சேர்ந்த 44 வயதான பிரான்சிஸ், செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 40 வயதில் மதனமேரி மற்றும் 3 பெண் குழந்தைகளும், 1 மகனும் உள்ளனர்.

இதனிடையே, குடிபோதைக்கு அடிமையான பிரான்சிஸ், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அத்துடன், வீட்டில் தினமும் மனைவியிடம் பிரச்சனை செய்து, மனைவியை அடித்து துன்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, எப்போதும் போல் நேற்று முன்தினம் பிரான்சிஸ் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டைபோட்டுள்ளார். அப்போது மனைவி மதனமேரி, பொறுமை காத்துள்ளார். இதனையடுத்து, அருகில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு பிரான்சிஸ் சென்றுவிட்டார்.

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரான்சிஸ், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் பொறுத்துப் பொறுத்து பார்த்த அவரது மனைவி, ஒரு கட்டத்தில் தனது பொறுமையை இழந்து, அங்குக் கிடந்த கல்லை எடுத்து பிரான்சிஸ்சை தாக்கி உள்ளார்.

இதில், தலையில் பலத்த காயத்தோடு ரத்த வெள்ளத்தில் சரிந்துவிழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், பயந்துபோன மதனமேரி, அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், பிரான்சிஸ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மதனமேரியை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, குடிபோதையில் தகராறு செய்த கணவனை, மனைவியே கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.