சினிமா முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவர் பிளாஸ்டிக் பைப்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் விவாகரத்து ஆன 25 வயது பெண் உள்பட5 ஊழியர்கள் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27-ம் தேதி தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு இளம்பெண்இரண்டு ஆண் ஊழியர்களுடன், செல்லூர் பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு சென்றுள்ளனர். முதல் காட்சி பார்த்து விட்டு, 4 பேரும் பெரியார் பேருந்து நிலையம் வந்தனர். உடன் வந்தவர்களை பேருந்தில் அனுப்பிவிட்டு, மகேஷ்குமார் தனது இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணுடன் அவனியாபுரம் சென்றுஇருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து மதுரை நேதாஜி ரோட்டில் சென்றபோது, இரவு ரோந்து பணியில் இருந்த ஏட்டு முருகன், மகேஷ்குமாரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தினார். பின்னர் மகேஷ்குமாரை மிரட்டி அவரிடமிருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டை வாங்கி பணத்தையும் எடுத்துக் கொண்டதாகவும், இளம்பெண்ணை தானே வீட்டில் விடுவதாக கூறி, தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் அந்த போலீஸ்காரர், இளம் பெண்ணை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு கடத்திச் சென்று உன் நடத்தை குறித்து வீட்டில் சொல்லி விடுவேன் என மிரட்டி விடுதியில் உள்ள ஊழியரிடம் இவர் என் உறவினர். கொஞ்சம் பிரஷ் ஆகி செல்ல வேண்டும் எனக் கூறி அறை எடுத்து அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து, காலையில் அந்தப்பெண்ணை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண் இரு நாட்களாக, யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார். அந்த பெண் வீட்டில் தன்னை போலீஸ்காரர் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து தெரிவித்து கதறி அழுதுள்ளார். இரண்டு நாட்களாக வேலைக்கு வராததால் உரிமையாளர் மகேஷ் சென்று விசாரித்தபோது, நடந்த சம்பவம் தெரியவந்தது. இதனிடையே, மகேஷ் ஏ.டி.எம்., கார்டில் இருந்து மொத்தம் 30 ஆயிரம் ரூபாய் எடுத்ததாக எஸ்.எம்.எஸ். வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஏட்டு மீது இளம்பெண் தரப்பில், மகேஷ்குமார் ஆகியோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பின், திலகர்திடல் குற்றப்பிரிவில் ஏட்டாக பணியாற்றும் முருகன், கடத்தப்பட்ட இளம்பெண் மற்றும் மகேஷ்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், குற்றம் உறுதியானதையடுத்து போலீஸ் ஏட்டு முருகன் கைது செய்யப்பட்டார்.