தமிழகத்தில் பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

நெல்லை சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்குப் பின்னர் அரசுப் பள்ளிகளில் உள்ள தரமற்ற கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு பழுதடைந்த கட்டடங்களை இடித்து வருகின்றனர். மேலும் அத்துடன் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்கள் உடனடியாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. மேலும் பழுதடைந்த கட்டங்களின் நிலை குறித்தும் அதிகாரிகள் அறிக்கை தயார் செய்தனர்.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகத்தில் இதுவரை இடிக்கப்பட்ட பள்ளிக் கட்டடங்கள், கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள், மாற்று இடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படதாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளில் பழைய கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக பழைய கட்டடங்கள் உள்ள 1,600 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவைகளை இடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஜனவரி மாதத்தில் பள்ளிகளுக்குத் திருப்புத் தேர்வு நடைபெறும். 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும். 2022 ஜனவரி முதல் வாரம் 3-ம் தேதி பள்ளிகள் திட்டமிட்டப்படி தொடங்கும். ஒமைக்ரான் பரவலால் சுழற்சி முறை வகுப்புகள் நடத்துவது குறித்தோ ஆன்லைன் வழி கல்வி முறையை பின்பற்றுவதோ குறித்தோ முதல்-அமைச்சர் அலுவலக ஆலோசனையின்படி முடிவெடுப்போம் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்தார்.