முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்பில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் சம்பவம், அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடல் மார்கமாக தப்பிச் செல்ல திட்டமிட்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைடுத்து, கடலோரப்  பகுதிகளில் காவல் துறையினர் தங்களது கண்காணிப்பு பணியை இன்னும் தீவிரப்படுத்தனர்.

அதாவது, “முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடமும், அவரது உதவியாளரிடமும் பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி, 1 கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்திருந்ததாகவும், இது தவிர அதிமுக கட்சி பணிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் என மொத்தம் 3 கோடியே 10 லட்சம் கொடுத்ததாகவும்” முன்னாள் அதிமுக நிர்வாகியான விஜய நல்லதம்பி குற்றச்சாட்டினார். 

இப்படியாக, “பணத்தை எல்லாம் பெற்றுக்கொண்டு பிறகு அரசு வேலையும் வாங்கித்தராமல், வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாக” முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய 4 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த மாதம் 15 ஆம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அவர் தலைமறைவான நிலையில், அவரை பிடிக்க 8 தனிபடைகளும் அமைக்கப்பட்ட நிலையில், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை.

அதன் தொடர்ச்சியாகவே, வேலைக்காக பணத்தை கொடுத்து ஏமார்ந்த மேலும் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் அளித்தார். இது தொடர்பாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அத்துடன், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்துல் மேல்முறையீடு செய்த நிலையில், இதற்கு பதில் மனுவாக தமிழக அரசு சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக, விமானம் மூலம் ராஜேந்திர பாலாஜி தப்பிச்செல்வதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு கடந்த வாரம் லுக் அவுட் நோட்டிஸ் கொடுக்கப்பட்டது.

எனினும், இதுவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாத நிலையில், ராஜேந்திர பாலாஜியிடம் தொடர்பில் இருந்த சக அதிமுக நிர்வாகிகளிடம் தனிப்படை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி, அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குறிப்பாக, விருதுநகர் போலீஸ் வட்டாரங்களில் ராஜேந்திர பாலாஜியின் செல்போன் சிக்னலை தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், அதைத் தொடர்ந்து தனிப் படை போலீஸார் குறிப்பிட்ட பகுதியில் முகாமிட்டு அவரது நடவடிக்கைகளை நுணுக்கமாகக் கண்காணிக்கின்றனர் என்றும், கூறப்படுகிறது.

மேலும், “இன்னும் ஓரிரு நாட்களில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவார்” என்றும், போலீஸ் வட்டாரங்கள் நம்பிக்கைத் தெரிவித்து உள்ளன.

அது நேரத்தில், தலைமறைவாக இருக்கும் ராஜேந்திர பாலாஜி தற்போது கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி பகுதிகளில் பதுங்கி இருக்கலாம்” என்று தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. 

இதனைத் தொடர்ந்து அவருக்கு உதவியதாக இருந்த சில அதிமுக நிர்வாகிகளிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.