பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என்று தமிழக மக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2 ஆம் தேதி கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான் மொத்த பாதிப்பு நேற்று 578 ஆக இருந்தது. டெல்லியில் அதிகபட்சமாக 142 பேருக்கும், மகாராஷ்டிராவில் 141 பேருக்கும் ஒமிக்ரான் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர். 

இந்நிலையில் இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

இதன்படி மகாராஷ்டிராவில் 167 பேருக்கும், டெல்லியில் 165 பேருக்கும், கேரளாவில் 57 பேருக்கும், தெலுங்கானாவில் 55 பேருக்கும், குஜராத்தில் 49 பேருக்கும், ராஜஸ்தானில் 46 பேருக்கும்,  தமிழ்நாட்டில் 34 பேருக்கும், கர்நாடகத்தில் 31 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 9 பேருக்கும், ஒடிசாவில் 8 பேருக்கும், ஆந்திராவில் 6 பேருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

omicron spread new year celebrationமேற்கு வங்கத்தில் 6 பேருக்கும், அரியானாவில் 4 பேருக்கும், உத்தரகாண்டில் 4 பேருக்கும், சண்டிகாரில் 3 பேருக்கும், காஷ்மீரில் 3 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 2 பேருக்கும், கோவாவில் ஒருவருக்கும், இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவருக்கும், லடாக்கில் ஒருவருக்கும்,  மணிப்பூரில் ஒருவருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் மராட்டிய மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 167 பேரில் இதுவரை 61 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், டெல்லியில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 165 பேரில் இதுவரை 23 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளநிலையில், மேலும் 42 பேரின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 10 மாநிலங்களில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஒமிக்ரான் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. 

new year omicronஅந்த வகையில் தமிழகத்துக்கு மருத்துவர் வினிதா தலைமையிலான மருததுவர்கள் புர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு உள்ளிட்ட 4 பேர் கொண்ட மத்திய நிபுணர் குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தடைந்தனர். 

இந்த குழுவினர் தொடர்ந்து தமிழகத்தில் தங்கி 3 முதல் 5 நாட்கள் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம் என்று தமிழக மக்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் ஒமிக்ரான் பாதிப்பில் 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 118 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்னரே எத்தனை பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் தெரியவரும். 

தமிழகத்தில் இரவு நேர ஊரங்கு தொடர்பாக டிசம்பர் 31 ஆம் தேதியன்று முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு தெரிய வரும். கடந்த சில தினங்களாக சென்னையில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

மக்கள் இடையே முககவசம் அணியும் பழக்கம் குறைந்து விட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் கண்காணிக்கப்படும். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் வேண்டாம்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.