நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டரின் மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர். அவருக்கு வயது 72, சுமார் 1200 படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ள அவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் பணியாற்றியுள்ளார்.

தமிழில் மறுபடியும், பூவே உனக்காக, திருடா திருடி, அருந்ததி, மகதீரா, பாகுபலி போன்ற பல படங்களில் இவர் நடன அமைப்பு பேசப்பட்டது. ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், காஜல் அகர்வால் நடித்த 'மகதீரா' படத்திற்காக தேசிய விருது பெற்றார். நடனம் அமைத்ததோடு, சில படங்களில் நடித்தும் இருக்கிறார்.
பாலாவின் பரதேசி, சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?', தானா சேர்ந்த கூட்டம், சர்க்கார், தில்லுக்கு துட்டு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சிவசங்கர் மாஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து ஹைத்ராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சிவசங்கர் மாஸ்டர். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. கொரோனா தொற்றால் அவரது நுரையீரல் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இளைய மகன் அஜய் கிருஷ்ணா உடனிருந்து கவனித்து வந்தார். இதற்கிடையே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் அவரது குடும்பம் கஷ்டப்படுவதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சோனு சூட் ஆகியோர் உதவி செய்தனர். இந்நிலையில் சிவ சங்கர் மாஸ்டர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வனிதா விஜயகுமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தானும் நடிகர் விஜய்யும் ஜோடியாக இணைந்து நடித்த சந்திரலேகா படத்தில் இடம்பெற்ற அல்லா உன் ஆணைப்படி பாடலுக்கு சிவசங்கர் மாஸ்டர் கொரியோகிராஃப் செய்ததை நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அவரது மரணம் உலுக்கும் செய்தி என்றும் நெஞ்சை பதற வைக்கிறது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகை நந்திதா ஸ்வேதா பதிவிட்டுள்ள டிவிட்டில் எவ்வளவு துக்கமான செய்தியை கேட்டுள்ளேன். இந்த லெஜன்ட்டுடன் இரண்டு படங்களில் பணிபுரிந்துள்ளேன். உங்களிடம் இருந்து நிறைய கற்றுள்ளேன் மாஸ்டர் என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டுள்ள இரங்கல் டிவிட்டில், பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். ஒரு அற்புதமான ஆன்மா, அவர் எப்போதும் எனக்கு ஒரு தூணாக இருந்தார். அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த மாபெரும் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். நடிகரும் நடன இயக்குநரும், திரைப்பட இயக்குநருமான பிரபு தேவா பதிவிட்டுள்ள டிவிட்டில், சிவசங்கர் மாஸ்டர்ஜியின் மறைவு செய்தி கேட்டு இதயம் உடைந்துவிட்டது. ஆழ்ந்த அனுதாபங்கள், அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.