வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 12 வட கடலோர மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது.

rainதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்பட சில மாவட்டங்களில் கன முதல் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து இருக்கிறது.
பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கி வரும் மழையால் அனைத்து பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகி இருக்கிறது. அந்தவகையில் விழுப்புரம், திருப்பத்தூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, கோவை ஆகிய இடங்களில் இயல்பை விட 100 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்து இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2 தினங்களை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்  குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மழை நீடிக்கும் என்பதால் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 12 வட கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்  இன்று வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதனைத்தொடர்ந்து நாளை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும் நாளை மறுதினம் தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அனேக இடங்களில் மிதமான மழையும், குமரி கடல் மற்றும் தென் மேற்கு வங்க கடல், தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், அந்தமான் கடல்பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மேற்சொன்ன நாட்களில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தற்போது வரை 34 செ.மீ. மழை பதிவாகி இருக்கவேண்டும். ஆனால் இயல்பை விட 74 சதவீதம் அதிகமாக 60 செ.மீ. என்ற அளவில் மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.