ஐ.நா. அதிகாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 51 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

court

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. இதனால் அந்நாட்டில் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவெடுத்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த குழுக்களை ஒழிக்கவும், நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டு அமைதியை ஏற்படுத்தவும் உள்நாட்டுப்படையுடன் இணைந்து ஐநா படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்நிலையில் அந்நாட்டின் கசை மாகாணத்தில் 2017-ம் ஆண்டு அரசுப்படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக ஐ.நா. சபைக்கு அறிக்கை அளிக்க அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் ஷார்ப் மற்றும் ஸ்வீடனை சேர்ந்த ஷைடா ஹடலன் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக செயல்பட்டனர். விசாரணை அதிகாரிகள் வன்முறை நடந்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள கசை மாகாணத்தில் காரில் சென்றபோது ஆயுதமேந்திய கிளர்ச்சி கும்பலால் கடத்தப்பட்டனர்.

மேலும் கடத்தப்பட்ட ஐ.நா. விசாரணை அதிகாரிகள் இருவரும் 2017 மார்ச் 28-ம் தேதி கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் அந்த மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தின் வனப்பகுதியில் மீட்கப்பட்டன. இந்த கொடூரமான கொலை ஐ.நா. அமைப்பை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த இரட்டை கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காங்கோ கொலையில் தொடர்புடையவர்கள் என 54 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில், 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஐ.நா. விசாரணை அதிகாரிகள் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு காங்கோ ராணுவ கோர்ட்டில் பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்தது. அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட 54 பேரில் 51 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகள் 51 பேருக்கும் தூக்குதண்டனை விதித்து கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. தூக்குதண்டனை விதிக்கப்பட்டபோதும் இந்த கொலை வழக்கில் இதுவரை 22 குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தபப்ட்டுள்ளது. 51 பேருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளபோதும் காங்கோவில் தூக்குதண்டனைக்கு எதிராக சட்டம் உள்ளதால் இது ஆயுள் தண்டனையாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.