ஒமைக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் வூகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்தில் ஆல்ஃபா, இந்தியாவில் டெல்டா, தென் ஆப்பிரிக்காவில் பீட்டா, பிரேசிலில் காமா என பல்வேறு வகைகளில் கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்துள்ளது. அதற்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. 

மேலும் இந்த ஒமிக்ரான் வைரஸ் பிற வைரஸ்களை ஒப்பிடும்போது அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 50 பிறழ்வுகளை கொண்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் 25-க்கும் அதிகமான நாடுகளில் அறிவிப்பதற்கு முன்னரே பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்நிலையில் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான்  வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன . வெளிநாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்திலேயே பரிசோதித்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பற்றி ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. இந்த ஆய்வின்போது, சீனாவின் உகானில் உருவான கொரோனா தொடங்கி பல்வேறு மாறுபாடுகள் வரையில், சுற்றுச்சூழல்தன்மையின் வேறுபாடுகளை ஆராய்ந்து உள்ளனர்.  இதில் ஒமைக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்ற தெரியவந்துள்ளது. கவலைக்குரிய மாறுபாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்கள், சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை தொடர்பு பரிமாற்றத்தின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் அவற்றின் பரவலுக்கு பங்கு அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் பரப்பின் மீது 56, ஆல்பா 191.3, காமா 59.3, பீட்டா 156.6, டெல்டா 114 மணி நேரம் வாழும், ஒமைக்ரான் 191.3 மணி நேரம் வாழும். ஒமைக்ரான் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிர்வாழ்கிறபோது, ஆல்பா 19.6, பீட்டா 19.1, காமா 11, டெல்டா 16.8 மணி நேரம் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் உலக சுகாதார நிறுவனத்தால் முன்மொழியப்பட்டபடி, தற்போதைய தொற்று கட்டுப்பாடு நடைமுறைகளுக்கு, கிருமிநாசினிகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.